"நாள் முழுக்க திருநீறு வைத்து கொண்டே இருக்க முடியுமா.." திருநீறு விவகாரம்.. திருமாவளவன் பதில்
மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்ட திருமாவளவன், அங்குக் கோயில் வளாகத்திலேயே நெற்றியில் இருந்த திருநீரை அழித்தார். இது பெரும் சர்ச்சையான நிலையில், பாஜகவினர் பலரும் திருமாவளவன் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். இதற்கிடையே இது தொடர்பாக திருமாவளவன் முக்கிய விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.
மதுரையில் இப்போது முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதில் அறுபடை வீடுகளின் மாதிரிகளையும் வைத்து வழிபட உள்ளனர். இதற்கிடையே இந்த முருக பக்தர்கள் மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விசிக சார்பில் மனிதச் சங்கிலி போராட்டம் நடந்தது. இதில் விசிக தலைவர் திருமாவளவன், இயக்குநர் அமீர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருமாவளவன்
முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க திருமாவளவன் மதுரைக்கு வந்திருந்தார். முருகனின் அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் இன்று காலை திருமாவளவன் தரிசனம் மேற்கொண்டார்.. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அங்குச் சாமி தரிசனம் செய்துவிட்டு மேற்கொண்டார்.
அப்போது கம்பத்தடி மண்டபம் வழியாக சென்றபோத, கோயிலுக்கு வந்த தம்பதியினர் அவருடன் செல்ஃபி எடுக்க வந்தனர். முதலில் அவர்கள் செல்போனை வாங்கிய திருமாவளவன் தனது நெற்றியில் இருந்த திருநீரை அழித்தார். அதன் பிறகே செல்பி எடுத்தார். கோயில் வளாகத்தில் இருக்கும்போதே திருமாவளவன் திருநீரை அழித்தது சர்ச்சையானது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், பாஜக தலைவர்கள் பலரும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கிடையே இது தொடர்பாக திருமாவளவன் விளக்கமளித்துள்ளார்.
திருநீறு விவகாரம்
திருநீறு அழித்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர், "அதற்கு முன்பு 30 நிமிடங்கள் திருநீறு அப்படியே தான் இருந்தது. அதன் பிறகே அழித்தேன்.. நாள் முழுக்க திருநீறு வைத்திருக்க முடியுமா" என்றார்.
முருக பக்தர்கள் மாநாடு
தொடர்ந்து பேசிய அவர், "தமிழகத்தில் அனைவரும் முருக பக்தர்கள் தான். முருகனை விரும்பாதவர்கள் இங்கு யாரும் இல்லை. கட்சி பேதமில்லாமல் முருக பக்தர்கள் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் அரசியலுக்காக மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்த மாநாடு நடத்துகிறார்கள். மக்கள் அதையெல்லாம் ஏமாற மாட்டார்கள். இந்துக்களை ஓரணியில் திரட்டுவது அவர்களைப் பாதுகாப்பதற்காக அல்ல. பாஜகவை ஆட்சியில் அமர வைக்கவே அப்படிச் செய்கிறார்கள்.
தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றே பாஜக துடிக்கிறது. இவர்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு கடவுளை வைத்து அரசியல் செய்கிறார்கள். அதன்படி தமிழ்நாட்டில் முருகனை வைத்து அரசியல் செய்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டு மக்களைப் பிளவுபடுத்த முடியாது" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications