காங்கிரஸ் செய்ய வேண்டிய வேலை.. கமல்ஹாசன் செய்து கொண்டிருக்கிறார்.. திருமாவளவன் பாராட்டு!
மதுரை: காங்கிரஸ் கட்சி செய்ய வேண்டிய வேலையை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செய்து கொண்டிருக்கிறார் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். காந்தியின் பெயரில் இருந்த 100 நாள் வேலைத் திட்டத்தின் பெயரை மாற்றி அற்ப அரசியலை பாஜக செய்வதாக விமர்சித்த திருமாவளவன், காந்தியின் படுகொலை நியாயப்படுத்துகிற கும்பலை எச்சரிக்கும் சூழலில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார். திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி, இம்முறை தங்களின் கட்சியினரை சட்டசபைக்கு அனுப்ப வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறது. அதற்கேற்ப கமல்ஹாசனும் அரசியல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் காந்தியை நினைவு கூறும் வகையில் "மறவோம்" என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் உட்பட திமுக கூட்டணியில் உள்ள தலைவர்கள் பலரும் பங்கேற்றனர். விசிக, சிபிஐ, சிபிஎம், காங்கிரஸ், தவாகா, ஐயூஎம்எல், மமக உள்ளிட்ட தலைவர்கள் மேடையில் ஒன்றாக அமைந்தனர்.
இதில் விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், காந்தியடிகளே.. உங்களை மறவோம்.. உங்கள் அர்ப்பணிப்பை மறவோம்.. விடுதலைக்காக நீங்கள் ஆற்றிய பங்களிப்பை மறவோம் என்று அவருக்கு சொல்வதோடு, அவரை படுகொலை செய்த சனாதன கும்பலுக்கும், நீங்கள் செய்த தேசத் துரோகத்தை மறவோம்.. உங்களை ஒரு போதும் மன்னிக்க மாட்டோம் என்று சொல்லுகிற ஒரு செய்தியாக தான் கமல்ஹாசனின் அரிய முயற்சி.
இது மிகவும் நுட்பமான அரசியல்.. காந்தியை சிறுமைப்படுத்தும் கும்பல் ஆட்சியில் இருக்கிறார்கள்.. காந்தியின் நன்மதிப்பை சிதைக்கும் கும்பல் அது.. காந்தியடிகள் மீது தேசம் வைத்துள்ள பிம்பத்தை தவிடுபொடியாக்கும் கும்பல்.. காந்தியின் தலைமையை ஏற்றுக்கொண்ட படேலுக்கு வானுயர சிலை வைத்து.. படேல் தான் உயர்ந்தவர்.. காந்தி சிறியவர் என்று காட்டுகிற அற்ப முயற்சி செய்யும் கும்பல்.
காந்தியின் பெயரில் 100 நாள் வேலைத் திட்டம் இருந்தது.. அந்தப் பெயரை மாற்றுகிற அற்ப அரசியல் செய்யும் கும்பல் கோலோச்சுகிற இந்த சூழலில்.. கோட்சே ஒரு தேச பக்தர்.. தேசத் தலைவர் என்று சொல்லுவதன் மூலமாக காந்தியை படுகொலை செய்தது நியாயம் என்று நியாயப்படுத்துகிற கொலைக்கார கும்பலுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டிய இந்த சூழலில்.. காங்கிரஸ் செய்ய வேண்டிய வேலையை அண்ணன் கமல்ஹாசன் செய்து கொண்டிருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications