CISF படையினருடன் திருப்பரங்குன்றம் வரும் இந்து அமைப்பினர்! போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்ட மலை
மதுரை: திருப்பரங்குன்றத்தின் மீது அமைந்துள்ள தீப தூணில், கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டிருந்தது. ஆனால் மாலை 6.55 வரை தீபம் ஏற்றப்படாத நிலையில், போலீசார் அமைத்திருந்த தடுப்புகளை உடைத்து கொண்டு மலை மீது செல்ல இந்துத்துவா அமைப்பினர் முயன்றனர். இதனால் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. எனவே மலை முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
திருப்பரங்குன்றத்தில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபம் அன்று உச்சி பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றப்படும். இந்த ஆண்டு சிக்கந்தர் தர்காவுக்கு பக்கத்தில் இருக்கும் விளக்கு தூணிலும் தீபம் ஏற்ற வேண்டும் என்று இந்துத்துவா அமைப்பை சேர்ந்த ராம ரவிக்குமார் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்திருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீப தூணிலும் விளக்கை ஏற்ற அனுமதி வழங்கி உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று மாலை 6 மணியளவில் வழக்கமாக தீபம் ஏற்றும் உச்சி பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றப்பட்டது. ஆனால் தீப தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. எனவே நீதிமன்ற உத்தரவுப்படி தீபம் ஏற்றவில்லை என்று கூறி இந்துத்துவா அமைப்பினர் திருப்பரங்குன்றம் மலைக்கு கீழே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் அமைத்திருந்த தடுப்புகளை உடைத்துக்கொண்டு அவர்கள் மலைக்கு மேல் செல்ல முயன்றனர். இதனால் போலீசுாருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் காவலர் ஒருவர் காயமடைந்துள்ளார். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர, போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டிருக்கின்றனர். குறிப்பாக, மலை முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
மாலை 6.55 வரை தீப தூணில் தீபம் ஏற்றப்படாததால், நீதிமன்றத்தில் பாதுகாப்பில் உள்ள CISF படையினரை அழைத்துக்கொண்டு 10 பேருடன் சென்று மனு தாரர் தீபம் ஏற்றலாம் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். இதனையடுத்து கோயிலுக்கு CISF படையினர் வர உள்ளனர்.












Click it and Unblock the Notifications