"அரோகரா" கோஷம் போடலாம்.. ஆனால் போலீசாரை தாக்கலாமா! தமிழக அரசு வைத்த மிக முக்கியமான வாதம்
மதுரை: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஐகோர்ட் மதுரை கிளையில் பல்வேறு காரசார விவாதங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கிடையே நீதிமன்ற அவமதிப்பு வழக்கில்.. திருப்பரங்குன்றம் விவகாரம் தமிழ்நாடு முழுக்க பெரும் பிரச்சனையாகிப் பரபரப்பாகி இருப்பதாகத் தமிழக அரசு வாதத்தை முன்வைத்துள்ளது. மேலும், அரோகரா கோஷம் போடலாம்.. ஆனால் போலீசாரை தாக்கலாமா என்றும் தமிழக அரசு கேள்வி எழுப்பியுள்ளது.
கார்த்திகை தீபத் திருவிழாவின் ஒன்பதாம் நாளான நேற்று திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இருப்பினும் இந்தக் கார்த்திகை தீபத்தை உச்சி பிள்ளையார் கோயிலுக்குப் பதிலாக மலை உச்சியில் உள்ள கார்த்திகை மகா தீபத்தூணில் ஏற்ற வேண்டும் எனச் சொல்லி சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

ஐகோர்ட் மதுரை கிளை
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மலை உச்சியில் தீபத்தை ஏற்ற உத்தரவிட்டார். இருப்பினும், உச்சி பிள்ளையார் கோயிலிலேயே தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து இது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டது. அந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிஐஎஸ்எஃப் வீரர்கள் உதவியுடன் மலை உச்சியில் அமைந்துள்ள உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற நீதிபதி உத்தரவிட்டார்.
மேல்முறையீடு தள்ளுபடி
தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து ஐகோர்ட் மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இன்று காலை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அப்போது பல்வேறு காரசார வாதங்கள் முன்வைக்கப்பட்டது. மேலும், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேல்முறையீட்டு மனு ரத்து செய்யப்பட்ட நிலையில், மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையை ஜிஆர் சுவாமிநாதன் விசாரணைக்கு எடுத்தார். நேற்றைய தினம் இந்த வழக்கில் தான் மனுதாரரே மலையின் மீது ஏறி தீபம் ஏற்றலாம் என உத்தரவிட்டிருந்தார்.
பரபரப்பான சூழல்
விசாரணை தொடங்கிய போது, திருப்பரங்குன்றம் விவகாரம் தமிழ்நாடு முழுக்க பெரும் பிரச்சனையாகிப் பரபரப்பாகி இருப்பதாக வாதத்தை முன்வைத்தார். எனவே, பிரதான வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை முடிந்த பிறகு.. இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்குமாறு தமிழக அரசுத் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். மேலும், அரோகரா கோஷம் போடலாம்.. ஆனால் போலீசாரை தாக்கலாமா என்றும் தமிழக அரசு வாதத்தை முன்வைத்தது
இருப்பினும், இதை ஏற்க மறுத்த நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன், தமிழகத்தில் அப்படி எந்தவொரு பதற்றம் அல்லது பரபரப்பு இல்லை என்றார். மேலும், இந்தத் தீர்ப்பால் யாருக்கும் எந்தவொரு பாதிப்பும் இல்லை என்றும் நீதிபதி தெரிவித்தார்.
டைம் கேட்ட தமிழக அரசு
அப்போது இதுபோன்ற நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் வழக்கமாக 4 வாரக் கால அவகாசம் தரப்படும் எனத் தமிழக அரசு வாதத்தை முன்வைத்தது. அதற்கு, 4 வாரங்கள் கால அவகாசம் கொடுத்தால் மட்டும் என்ன செய்யப் போகிறீர்கள் என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்குச் சட்டப்படி தேவையான விளக்கங்களைக் கொடுப்போம் எனத் தமிழக அரசுத் தரப்பில் தெரிவித்தனர்.
மேலும், மலை உச்சியில் தீபத்தை ஏற்ற சொல்லி உத்தரவிட்ட பிரதான வழக்கிலும் தமிழக அரசு தனியாக மேல்முறையீடு செய்திருந்தது. அந்த மேல்முறையீட்டு நாளை விசாரணைக்கு வரும் நிலையில், அதுவரை எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்க வேண்டாம் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications