அப்படி ஒரு மிடுக்கு.. துடிப்பு.. நடிப்பு.. இப்ப கம்பி எண்ணுறாரு.. தேவையா மாப்ளே இதெல்லாம்!
மதுரை: நிஜமான போலீஸ்காரங்க கூட இப்படி பேச மாட்டாங்க.. அப்படி ஒரு மிடுக்கு.. துடிப்பு.. நடிப்பு.. என்று கேலி செய்து டிக்-டாக் வீடியோ வெளியிட்ட ஆட்டோக்காரரை போலீசார் கொத்தோடு அள்ளிக் கொண்டு போய்விட்டனர்!
இப்போதெல்லாம் டிக்-டாக் என்ற ஆப் மக்களிடையே பிரபலமாகி வருகிறது. இதில், இளசுகள் முதல் பெரிசுகள் வரை தங்கள் கலைதாகத்தை அப்படியே பிழிந்து எடுத்து வருகிறார்கள்.
இந்த ஆப்பிற்கு தடை விதிக்க கோர்ட் வரை விஷயம் சென்று, பிறகு கண்டிஷன்களுடன் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

திருப்பரங்குன்றம்
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஒரு ஆட்டோக்காரரும் டிக்-டாக் வீடியோவில் தனது திறமையை காட்ட முயன்றுள்ளார். அவர் பெயர் சரவணன். திருப்பரங்குன்றத்தை அடுத்த நிலையூர் பகுதியை சேர்ந்தவர்.

கிராப் தலை
போலீஸ் அதிகாரி போல டிரஸ் போட்டுக் கொண்டார். தலைமுடி கிராப், மீசை எல்லாம் டிட்டோ போலீஸ் போலவே வைத்து கொண்டு சாதிய வன்முறையை தூண்டும் வகையில் பேசுகிறார்.

வீடியோ வைரல்
அப்படி பேசும்போது நாடி நரம்புகள் முறுக்கேறுகின்றன... விஜயகாந்த்துக்கு கோபம் வந்தால் கண் ரெட் கலரில் சிவக்குமே.. அந்த மாதிரி இருப்பதாக நினைத்து கொண்டு கண்களை சுருக்கி மிரட்டுகிறார். பேசும்போது, நடுநடுவே அவரது மீசையை தடவி கொள்கிறார். இதை வீடியோவாக எடுத்து இணையத்திலும் போட்டுவிட்டார்.

கைது
அது வைரலாக விசுவரூபமெடுத்து, கடைசியில் திருநகர் போலீசாருக்கு புகாராக வந்தது. வன்முறையை தூண்டும் வகையில் அந்த வீடியோ பேச்சு இருப்பதாக சொல்லப்பட்டதையடுத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில், ஆட்டோக்கார சரவணன் சிக்கிவிட்டார். அவரை போலீசார் கைது செய்துள்ளதுடன், 2 பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications