திருப்பரங்குன்றம்: "ராம ரவிக்குமார் மீதுதான் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவேண்டும்” அரசு வாதம்
மதுரை: "மனுதாரர் 10 நபர்களோடு இணைந்து தீபத்தூணில் தீபமேற்ற அனுமதி வழங்கினார் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன். மனுதாரர் பெரும் கூட்டத்தோடு சென்று சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளார். அவர் மீதே நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்." என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அரசு தரப்பு வாதம் வைத்துள்ளது.
மேலும், மனுதாரர் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றச் சென்றபோது பேரிகார்டுகள் உடைக்கப்பட்டுள்ளன, காவலர்கள் தாக்கப்பட்டுள்ளனர், மதப்பிரச்னை ஏற்படும் நிலை உருவானது என்றும் அரசு தரப்பு வாதம் செய்துள்ளது.

மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது 100 ஆண்டுகளாக ஏற்றப்பட்டு வரும் கார்த்திகை தீபத்தை, புதிய இடத்தில் ஏற்ற நீதிபதி போட்ட உத்தரவால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. தடையை மீறி மலை ஏறியதை தடுத்ததால் போலீசார் மீது இந்து முன்னணி, பாஜகவினர் தாக்குதல் நடத்தினர். இதில் 2 போலீசாருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. தொடர்ந்து, பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம், எழுமலையை சேர்ந்த ராம ரவிக்குமார் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், "முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு என்ற பெருமையை பெற்றது மதுரை அருகே உள்ள திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில். கார்த்திகை மாதம் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றலாம். ஆனால், தீபத்தூணில் தீபம் ஏற்றாமல், உச்சி பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் தீபத்தை ஏற்ற முடிவு செய்துள்ளனர். இந்த உத்தரவை ரத்து செய்து மீண்டும் மலை மீதுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுமாறு உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இந்த மனுவை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். அரசு தரப்பில், "திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற அனுமதி கோரப்பட்டது. குறிப்பிட்ட இடத்தில் தான் ஏற்ற வேண்டுமென்பதை உரிமையாக கோரியுள்ளனர்" என கூறப்பட்டது. அப்போது நீதிபதி, "மலை மீது என்றே அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது" என்றார்.
இதற்கு அரசு தரப்பில், 'உச்சிப் பிள்ளையார் கோயிலும் மலை மீதே உள்ளது' என தெரிவிக்கப்பட்டது. இடையீட்டு மனுதாரரான வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தரப்பில், "உச்சி பிள்ளையார் கோயில் அருகே கார்த்திகை விளக்கு ஏற்றுவது ஆகம விதிகளுக்கு எதிரானது என எவ்விதமான ஆவணங்களும் இல்லாமல் கூறுவதை ஏற்க இயலாது. திருப்பரங்குன்றம் மலை தொல்லியல் துறைக்கு சொந்தமானது என்பதால், தொல்லியல் துறையிடம் அனுமதி பெற வேண்டும்" என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, திருப்பரங்குன்றம் மலை பகுதிக்கு நடந்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், இவ்வழக்கில் கடந்த 1 ஆம் தேதி தீர்ப்பளித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ''மலை உச்சியில் இருக்கும் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும். இதற்கு காவல்துறை தரப்பில் உரிய அனுமதியும், பாதுகாப்பும் வழங்க வேண்டும்'' என உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற போதிய முன்னேற்பாடுகள் செய்யவில்லை என்று அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி நேற்று மீண்டும் ராம ரவிக்குமார் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். அப்போது, திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலர் உள்ளிட்டோர் காணொளிக் காட்சி வாயிலாக ஆஜராகினர். அவர்களிடம் நீதிபதி, ''திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் மாலை 6 மணிக்குள் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும். இல்லாவிட்டால், 6.05 மணிக்கு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்'' என எச்சரித்து விசாரணையை தள்ளி வைத்தார்.
இதன் காரணமாக திருப்பரங்குன்றம் பகுதியில் பதற்றமான சூழல் நிலவியதால் திருப்பரங்குன்றம் கோயில் சுற்றுப்பகுதி முழுவதும் ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டிருந்தனர். பாஜக மற்றும் இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்பினர் ஏராளமானோர் திருப்பரங்குன்றம் கோயிலை சுற்றிலும் குவிந்தனர். அவர்கள் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில்தான் தீபம் ஏற்ற வேண்டுமென கோஷமிட்டனர்.
கோயில் தரப்பில், நூறாண்டுகளுக்கும் மேலாக பின்பற்றப்படும் நடைமுறைப்படி, உச்சி பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, மாலை 6 மணிக்கு மலை மீதுள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் மேல் தளத்தில் உள்ள தீப மண்டபத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
மாலை 6.10 மணிக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மனுவை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். மனுதாரர் ராம ரவிக்குமார் தரப்பில், ''மோட்ச தீபம் ஏற்றும் உச்சிப்பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் தான் தீபம் ஏற்ற அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என தெரிவித்தனர். அப்போது நீதிபதி, ''ஏன் நீதிமன்ற தீர்ப்பை அரசுத் தரப்பில் நிறைவேற்றவில்லை?'' என்றார். இதற்கு அரசுத் தரப்பில், ''வழக்கம் போல் தீபம் ஏற்றும் இடத்திலேயே தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் இந்த வழக்கின் மனுதாரருடன் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சென்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும். இந்த நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றியது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
உச்சிப் பிள்ளையார் கோயில் தீபத்தூணில் தான் தீபம் ஏற்றியதை கண்டித்து, இந்து அமைப்பினர், பாஜவினர் முற்றுகை மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீஸ் தடையை மீறி மலை ஏற முயன்றனர். இதனால், போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடுமையான வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்றப்பட்டது. அப்போது இந்து அமைப்பினர், பாஜவினர் தாக்கியதில் 2 போலீசார் மண்டை உடைந்தது. லீசாரை தாக்கி விட்டு, 'பாரத் மாதா கீ ஜே' என கோஷமிட்டவாறு மலை மீது ஏற முயன்ற இந்து அமைப்பினர், பாஜவினரை போலீசார் தடுத்து கைது செய்தனர்.
திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் தீர்ப்பால் ஏற்பட்டுள்ள பதற்றம் தொடர்பாக அரசு தரப்பு மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்து, உடனடியாக விசாரணை எடுத்துக் கொள்ள வேண்டுமென நேற்றிரவு தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா முன் முறையீடு செய்யப்பட்டது. உடனடியாக ஐகோர்ட் கிளையில் நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வில் முறையீடு செய்யுமாறு தலைமை நீதிபதி அறிவுறுத்தினார். இதைத் தொடர்ந்து அரசுத் தரப்பில் ஐகோர்ட் கிளை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் அமர்வில் முறையீடு செய்யப்பட்டது.
இதையடுத்து, இன்று அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு மீது உயர்நீதிமன்ற மதுரை கிளை இரண்டு நீதிபதிகள் அமர்வு விசாரணையை தொடங்கியது.
அப்போது தமிழக அரசு தரப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "மனுதாரர் 10 நபர்களோடு இணைந்து தீபத்தூணில் தீபமேற்ற அனுமதி வழங்கியுள்ளார் நீதிபதி ஜி.ஆர். .சுவாமிநாதன். மனுதாரர் பெரும் கூட்டத்தோடு சென்று சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளார். அவர் மீதே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்கப்பட வேண்டும். பேரிகார்டுகள் உடைக்கப்பட்டுள்ளன, காவலர்கள் தாக்கப்பட்டுள்ளனர், மதப் பிரச்சனை ஏற்படும் நிலை உருவானது" என வாதம் வைத்தார்.
மேலும் சிஐஎஸ்எஃப் வீரர்கள் உயர் நீதிமன்ற வளாக பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு உயர் நீதிமன்ற வளாகத்தைத் தாண்டி எந்த அதிகாரமும் இல்லை. அவர்களை சட்டம் ஒழுங்கு பணி மேற்கொள்ள அனுமதிக்க முடியாது. மேலும், மனுதாரரை பாதுகாப்பதும் சிஐஎஸ்எஃப் வீரர்கள் பணியல்ல. மனுதாரருக்கு தீபம் ஏற்றுவதைத் தாண்டி மறைமுக உள்நோக்கம் உள்ளது.
அவரால் திரண்ட கூட்டத்தினர் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் போலீஸ் மீது தாக்குதல் நடந்தது. காவலர்கள் சிலர் காயமடைந்துள்ளனர். மலைக்குச் செல்லும் வாயில்கள் சேதம் அடைந்துள்ளது. எனவே மனுதாரர் ராம ரவிக்குமார் மீதுதான் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுத் தரப்பு வாதத்தை முன்வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications