ஓபிஎஸ் மனம் மாறி வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா? வந்து விழுந்த கேள்வி.. செல்லூர் ராஜூ கொடுத்த பதில்
மதுரை: சட்டமன்றத்தில் நடந்தது எல்லாம் உங்களுக்கு தெரியும். அங்கே ஆளும் கட்சிக்கு துதி பாடுபவர்களுக்குதான் மரியாதை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். ஒபிஎஸ் மனம் மாறி வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா? என்ற கேள்விக்கும் செல்லூர் ராஜூ பதிலளித்தார்.
மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சட்டமன்றத்தில் நடந்தது எல்லாம் உங்களுக்கு தெரியும். அங்கே ஆளும் கட்சிக்கு துதி பாடுபவர்களுக்குதான் மரியாதை.. மக்கள் பிரச்சினை எடுத்து சொல்லும் அதிமுகவிற்கு ஆரோக்கியமான ஜனநாயக அடிப்படையில் எதிர்ப்பை தெரிவிக்க சபாநாயகர் இடம் கொடுப்பது இல்லை.

ஆளும் கட்சியும் இடம் கொடுப்பது இல்லை. எடப்பாடி பழனிசாமி பேசினால் திமுகவினர் உட்கார்ந்து கொண்டு பேசுவது, கூச்சல் போடுவது போன்ற வழிமுறையை கடைபிடிக்கிறார்கள். ஆனால் முதல்வர் பேசினால் அதிமுக உறுப்பினர்கள் கண்ணியம் காக்கிறோம். அதிமுகவிற்கும் திமுகவிற்கும் எவ்வளவு வேறுபாடு உள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது அப்போதைய முதல்வர் பேசும் போது அவை நடவடிக்கையில் கலந்து கொண்டது கிடையாது. அராஜகமான முறையில் திமுக எதிர்ப்பை தெரிவித்து வெளியே போகும். இதுதான் நடந்தது. ஆனால், நாங்கள் ஜனநாயக முறைப்படி எங்கள் தலைவர்கள் காட்டிய வழியில் ஒழுக்கமான முறையில் எங்கள் எதிர்ப்பை தெரிவித்தால் பேரவைத்தலைவர் அனுமதியே கொடுப்பது கிடையாது.
இது மிக மிக வருத்தத்திற்கு உரியதாக உள்ளது. சட்டப்பேரவை முழுக்க முழுக்க பேரவைத்தலைவர் கட்டுப்பாட்டில் உள்ளது. கூச்சல் போடுகிறவர்களை அடக்குகிறாரா என்றால் அடக்குவது இல்லை. சட்டமன்றத்தில் ஜனநாயகம் இல்லை. இந்த அரசாங்கத்தின் செயல்பாடுகளை மக்களின் எண்ணங்களை சட்டமன்றத்தில் தான் பிரதிபலிக்க முடியும். அங்கேயும் வழிமுறை இல்லை.
திமுக ஒரு ரவுடி கட்சி. அந்தக் கட்சியிடம் இருந்து ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியாது. விமர்சனங்களை முதல்வரோ, அமைச்சரோ தாங்கிக் கொள்வது இல்லை. பேரவைத்தலைவருக்கும் இல்லை. அவரே பதில் சொல்லிவிடுகிறார். எதிர்க்கட்சித்தலைவரை பேசவே விடுவதில்லை. சபாநாயகர் வாத்தியார் மாதிரி நடந்து கொள்கிறார். கேலிக்கூத்தாக உள்ளது.
அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் உள்ளது. இங்கிருந்து போனவர்கள் மனம் மாறி திரும்ப வரவேண்டும். அதற்கு முயற்சி செய்யவேண்டுமே தவிர தொண்டர்கள் எரிச்சல் அடையும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது. ஒபிஎஸ் மனம் மாறி வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா? என்று கேட்கிறீர்கள். எங்கள் பொதுச்செயலாளருக்கு எல்லா அதிகாரமும் கொடுத்து விட்டோம். இவ்வாறு செல்லூர் ராஜூ கூறினார்.












Click it and Unblock the Notifications