டிக் டாக் செயலி மீதான தடையை நிபந்தனையுடன் நீக்கியது ஐகோர்ட் மதுரை கிளை
மதுரை: டிக் டாக் செயலி மீதான தடையை நீக்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சில நிபந்தனைகளுடன் டிக் டாக் செயலி மீதான தடையை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
சிறுவர், சிறுமியர்கள், பெண்களின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது என்ற நிபந்தனையுடன், டிக் டாக் செயலிக்கான தடையை நீதிமன்றம் நீக்கியுள்ளது. வழக்கு விசாரணையின் போது டிக்டாக் நிறுவனம் உறுதி ஒன்றை அளித்துள்ளது.
அதன்படி தவறான நோக்கத்திலோ அல்லது ஆபாசமாகவோ வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டால், 15 நிமிடங்களுக்குள் அவை அகற்றப்படும் என கூறியுள்ளது. மேலும் பேஸ்புக், வாட்ஸ்அப் செயலிகளை விட டிக் டாக்கில் அதிக பாதுகாப்பு வசதிகள் உள்ளதாகவும் குறிப்பிட்டது. இந்தியாவில் இருந்து தங்களுக்கு இதுவரை எவ்வித புகார்களும் வரவில்லை எனவும் கூறியது.
இந்த செயலியை மீண்டும் பயன்படுத்துவற்கு பின்வரும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது:
- பெண்கள், சிறுவர்களை பாதிக்கும் வகையில் பதிவுகளை பதிவேற்றம் செய்ய கூடாது.
- பாலியல், சமூக சீரழிவுகளை ஏற்படுத்தும் வகையிலும் பதிவுகளை பதிவேற்ற கூடாது.
- சிறுவர், சிறுமியர்கள், பெண்களின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது.
தூங்கிய பெண்ணை டார்ச் லைட் அடித்துப் பார்த்த இளைஞர்.. தட்டிக் கேட்ட கணவர் வெட்டிக் கொலை
இதனையடுத்து டிக் டாக் தரப்பின் வாதத்தை ஏற்று தடையை நீக்கிய நீதிமன்றம், விதிக்கப்பட்ட நிபந்தனையை டிக்டாக் நிறுவனம் மீறினால் நீதிமன்ற அவதூறு வழக்கு தொடரப்படும் என எச்சரித்தது.
தடை நீக்கப்பட்டதை அடுத்து கூகுள் பிளே ஸ்டோரில், டிக் டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இன்றைக்குள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் கெடு விதித்திருந்தது.
இன்றைக்குள் உரிய தீர்ப்பு வழங்காமலும், டிக்-டாக் செயலி தொடர்பான எந்த முடிவையும் எடுக்காமலும் இருந்தால். அச்செயலிக்கான தடை தானாகவே விலகியதாக கருதலாம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. இந்நிலையில் டிக் டாக் செயலிக்கு விதித்த தடையை நிபந்தனைகளுடன் நீக்கி உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.