திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவுக்கு சென்ற இஸ்லாமியர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் தர்காவிற்கு ரம்ஜான் சிறப்பு தொழுகைக்காக செல்ல முயன்ற இஸ்லாமியர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அனைவரது விவரங்களையும் கேட்டறிந்த பிறகு தான் அனுமதிப்போம் என போலீசார் கூறியதால், இஸ்லாமியர்கள் மற்றும் போலீசார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மற்றும் மலையில் உள்ள தர்கா தொடர்பாக கடந்த சில மாதங்களாகவே சர்ச்சைகள் தொடர்ந்து வருகின்றன. இந்த நிலையில் இன்று ரம்ஜான் பண்டிகையையொட்டி அங்கு செல்ல இருந்த இஸ்லாமியர்களை போலீசார் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா
தமிழ் கடவுளான முருகனின் அறுபடைகளில் ஒன்று திருப்பரங்குன்றம் முருகன் கோவில். இந்த கோவில் இருக்கும் மலை உச்சியில் இஸ்லாமியர்களுக்கான சிக்கந்தர் தர்காவும் உள்ளது. இந்த நிலையில் தான் கார்த்திகை தீபத்திருநாளையொட்டி முருகன் கோயில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதில் தீபம் ஏற்றக்கோரி தனி நீதிபதி உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக தற்போதுவரை வழக்கு நிலுவையில் உள்ளது. இதையடுத்து திருப்பரங்குன்றம் மலைக்கு செல்வோரிடம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், அவர்களது விவரங்களை சேகரித்து, அதன் பின்னர் அனுமதித்து வருகிறார்கள். இன்று ரம்ஜான் பண்டிகை என்பதால் மலை மீது உள்ள சிக்கந்தர் தர்காவுக்கு இஸ்லாமியர்கள் செல்வதற்காக வந்தனர்.
ரம்ஜான் பண்டிகை தொழுகை
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள பள்ளி வாசலில் சிறப்பு தொழுகை நடைபெறும். அதன்படி இன்று தொழுகையில் பங்கேற்க ஏராளமான இஸ்லாமியர்கள் மலைக்கு செல்ல அடிவாரத்திற்கு வருகை தந்தபடி இருந்தனர். அப்போது சிக்கந்தர் தர்காவிற்கு தொழுகை நடத்துவதற்காக சென்ற இஸ்லாமியர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
தொழுகைக்கு செல்லும் ஒவ்வொருவரும், தங்கள் பெயர் மற்றும் விபரங்கள் கொடுக்க வேண்டும். இதன் பிறகு தான் மலை மீது ஏற அனுமதிக்க முடியும் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. இதை கேட்ட இஸ்லாமியர்கள் நாங்கள் எப்போதும், வருஷம் வருஷம் ரம்ஜான் திருநாளில் அமைதியான முறையில் தொழுகை நடத்திவிட்டு திரும்புகிறோம்.. இப்படி இருக்கையில் எங்களை ஒவ்வொருவராக அனுமதிப்பது ஏன் என கேட்டனர்.
இஸ்லாமியர்கள் - போலீசார் வாக்குவாதம்
ஆனால் போலீசார் மறுத்ததால் தொடர்ந்து அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. காவல்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு இஸ்லாமிய அமைப்பினரும் பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். ரம்ஜான் நாளில் ஒவ்வொருவராக அனுப்ப முயற்சிப்பது ஏற்புடையது கிடையாது.. மத நல்லிணக்கத்திற்கு ஆபத்தானது என தெரிவித்தனர். தொடர்ந்து அவர்கள் அனைவரது விவரங்களையும் பெற்றுக் கொண்ட போலீசார் தொழுகைக்கு செல்ல அனுமதித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications