கட்டப்படாத எய்ம்ஸ் மருத்துவமனைக்கு.. எப்படி மாணவர் சேர்க்கை நடத்துவது?.. அமைச்சர் பி.டி.ஆர் கேள்வி!
மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படாத நிலையில் அங்கு எப்படி மாணவர் சேர்க்கை நடத்த முடியும் என்று தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.
அதன் பின்னர் கடந்த 2019-ம் ஆண்டு தொடக்கத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அடிக்கல் நாட்டியதோடு சரி, இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் எப்போதுதான் தொடங்கும் என்று பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.

மாணவர் சேர்க்கை
''மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் மருத்துவம் படிக்க 150 மாணவர்களை சேர்க்கலாம். கல்லூரிக்கான கட்டிடம் இல்லாத பட்சத்தில் வகுப்புகளை வேறு இடத்தில் தொடங்கலாம் என்றும் மாணவர்கள் படித்து முடிக்கும் போது எய்ம்ஸ் வளாகத்தில் கல்லூரி கட்டி முடிக்கப்படும். பிறகு இடமாற்றம் செய்து கொள்ளலாம்'' என்று தமிழக அரசுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. இந்த நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படாத நிலையில் அங்கு எப்படி மாணவர் சேர்க்கை நடத்த முடியும் என்று தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

எப்படி நடத்துவது?
மதுரை சிம்மக்கல் பகுதியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை துவக்கி வைத்த பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:- மக்களை தேடி மருத்துவத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.மருத்துவமனையை தேடி வர முடியாத மக்களுக்கு வீட்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவதுறை அடுத்தடுத்து முன்னேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க ஒரு கல் கூட வைக்காமல் நிலத்தை தோண்டாமல் மாணவர் சேர்க்கையை எப்படி நடத்துவது? எங்கு வைத்து நடத்துவது?

தெளிவு இல்லை
நிதியும் ஒதுக்கீடு செய்யாமல் எப்படி மாணவர் சேர்க்கை நடத்துவது?.கட்டிடமே இல்லாமல் எப்படி மருத்துவ கல்லூரி நடத்துவது? நாடு முழுவதும் பல இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிக்கப்பட்டு செயல்படுத்தவில்லை. கொரோனோ பொது முடக்கத்தால் பொருளாதாரம் மிகவும் பின்தங்கிய நிலைக்கு சென்றுள்ளது. பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் பணியை செய்து வருகிறோம். அ.தி.மு.க ஆட்சியில் தெளிவு இல்லாமல் முழு அடைப்பு செய்யப்பட்டது.

மருத்துவ கட்டமைப்புகள்
இந்திய தேர்தல் ஆணையமே 8 கட்டங்களாக தேர்தல் நடத்தி வருகிறது. ஆனால் எதிர்க்கட்சி தலைவர் ஒரே கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார் அவர் எந்த அடிப்படையில் வலியுறுத்தி உள்ளார் என்பதை அறிந்துகொண்டு விளக்கம் அளிக்கப்படும்.கொரோனா தடுப்பு பணிகளை தமிழக அரசு ஒரு அளவிற்குதான் செய்ய முடியும்.மக்கள் மிக பாதுகாப்பாக இருக்க வேண்டும்.3 வது அலையில் மருத்துவ கட்டமைப்புகள் தயாராக உள்ளது.

நேரடி ஒளிபரப்பு
கொரோனோ முழு அடைப்பின் போது 25.04 சதவீதமாக இருந்த பொருளாதார வீழ்ச்சி தற்போது 20 சதவீதமாக உயர்ந்து உள்ளது.கடந்த அ.தி.மு.க ஆட்சியில் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களுக்கு பேச வாய்ப்புகள் வழங்கப்படாத நிலை மாறி தற்பொழுது ஜனநாயக முறைப்படி எதிர்க்கட்சியினருக்கும் பேச வாய்ப்பு வழங்கப்பட்டு ஜனநாயகம் நிலை நாட்டப்பட்டுள்ளது. நான் முதல்முறை சட்டமன்றத்திற்கு செல்லும் போது அச்சமாக இருந்தது. எதிர் வரும் சட்டமன்ற கூட்டம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என முதல்வர் உறுதி அளித்து உள்ளார். இவ்வாறு பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications