அதிமுக-விற்குள் வெடிக்கும் பூகம்பம்! கட்சியில் மீண்டும் ஒரு பிளவு? சிவி சண்முகம் தலைமையில் தனியாக மீட்டிங்!
சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவுக்குள் புதுபுது குழப்பங்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. கடந்த 4-5 நாட்களாக 20க்கும் அதிகமான எம்எல்ஏக்கள் புதுவை ரெசார்ட்டில் தங்க வைக்கப்பட்ட நிலையில், இன்று காலை அனைவரும் சென்னை வந்தனர்.
இந்த நிலையில் அதிமுக கட்சியின் எம்எல்ஏக்கள் தவெகவுடன் இணைவது குறித்து விவாதிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலை அதிமுகவின் நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது. தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் கட்சியின் தலைமைக்கும், எம்எல்ஏக்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்க துவங்கியுள்ளது.
இதற்கிடையில் விஜயின் தவெக 116 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் மட்டும் இருக்கும் காரணத்தால் பெரும்பான்மை காட்ட கூடுதல் எம்எல்ஏக்களுக்கு தொடர்ந்து வலைவீசி வருகிறது. இதேவேளையில் விசிகவின் முடிவுகளுக்காக விஜய் காத்திருக்கிறார்.

சென்னையில் சிவி சண்முகம் தலைமையில் தனி ஆலோசனை
சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தலைமையில் எம்எல்ஏக்கள் தனியாக ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளனர். இந்தக் கூட்டம் கட்சியின் தலைவர் ஈபிஎஸ் நடத்திய அதிகாரப்பூர்வ ஆலோசனை கூட்டத்திலிருந்து தனியாக நடந்து வருகிறது.
இதன் மூலம் அதிமுகவுக்குள் இருக்கும் உள் முரண்பாடுகள் வெளிப்படையாகத் தெரியத் தொடங்கியுள்ளன. எம்எல்ஏக்கள் தங்களது எதிர்கால நிலைப்பாட்டையும், ஆதரவையும் குறித்து தனிப்பட்ட முறையில் பேசி வருவதாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
2 நாட்கள் முன்பு அதிமுக முக்கிய தலைவர்களான சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி ஆகியோர் ஈபிஎஸ்-ஐ சந்தித்து தவெக உடன் கூட்டணி வைக்க கோரிக்கை வைத்து வந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி இதற்கு முழுமையாக மறுப்பு தெரிவித்தார்.
ஈபிஎஸ் ஆலோசனை கூட்டம்
இன்று காலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு தான் சிவி சண்முகம் தலைமையிலான தனி ஆலோசனை நடந்துள்ளது. இந்த இரண்டு கூட்டங்களும் ஒரே நாளில் நடைபெற்றுள்ளது கட்சிக்குள் இருக்கும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது அடுத்தகட்ட நகர்வுகளை தவெக கட்சிக்கு ஆதரவாக எடுத்து வைப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
30க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் பங்கேற்பு
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் 30க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் கலந்து கொண்டுள்ளனர். சிவி சண்முகம் தலைமையிலான கூட்டத்தில் எத்தனை பேர் கலந்துக்கொண்டு உள்ளனர், யாரெல்லாம் கலந்துக்கொண்டு உள்ளனர் என்ற விபரம் வெளியாகவில்லை. இக்கூட்டத்தில் பங்கேற்ற எம்எல்ஏக்கள் தவெகவுடன் தொடர்பு கொள்வது குறித்து விரிவாகப் பேசியதாகத் தெரிகிறது. இந்த நகர்வு அதிமுக கட்சியின் ஒற்றுமையை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.
ஈபிஎஸ் கூட்டத்தில் பங்கேற்காத 5 எம்எல்ஏக்கள்
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காத 5 எம்எல்ஏக்கள் தவெகவின் பக்கம் திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஐந்து எம்எல்ஏக்களும் தவெகவை நோக்கி நகர்ந்துள்ளனர் என்பது அதிமுகவுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் அதிமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி, தேர்தல் முடிவுகள் குறித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
நடைபெற்று முடிந்த 17வது தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். மேலும் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என எடப்பாடி பழனிச்சாமி தனது அறிக்கையில் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications