விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு?
சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள ஒரு ராஜ்யசபா எம்பி பதவிக்கு ஜூன் 18 ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் விஜய்யின் தவெக எளிதில் வெல்ல வாய்ப்பு இருந்தாலும் கூட கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு இந்த இடம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியில் ராஜ்யசபா எம்பியாக கடும் போட்டி நிலவி வருகிறது. குறிப்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, பிரவீன் சக்கரவர்த்தி இடையே கடும் போட்டி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் விழுப்புரம் மாவட்டம் மயிலம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் சிவி சண்முகம். இந்த வெற்றியை தொடர்ந்து அவர் தனது ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்தார். ராஜ்யசபா பதவிக்காலம் 6 ஆண்டுகளாகும். சிவி சண்முகத்தின் பதவிக்காலம் 2028 ஜூன் வரை இருந்தது. ஆனால் அவர் எம்எல்ஏவான நிலையில் ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்தார்.

இதனால் 2 ஆண்டு பதவிக்காலம் மீதமுள்ளது. இந்நிலையில் தான் சிவி சண்முகம் ராஜினாமா செய்ததால் காலியாக உள்ள ராஜ்யசபா எம்பி இடத்துக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது தனிப்பெரும் கட்சியாக முதல்வர் விஜய்யின் தவெக தான் உள்ளது. இதனால் எளிதாக தவெகவால் ராஜ்யசபா எம்பி பதவிக்கு வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற வைக்க முடியும்.
ஆனால் இந்த ராஜ்யசபா எம்பி பதவியை தவெகவுடன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி கோரியது. நேற்றைய தினம் காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம், முதல்வர் விஜய்யை சந்தித்து இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இதையடுத்து இனறு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் விஜய்யை சந்தித்து ராஜ்யசபா இடத்தை தங்களுக்கு வழங்கும்படி கோரிக்கை வைத்திருந்தார். கிரிஷ் சோடங்கர், விஜய்யை சந்தித்து சென்ற அடுத்த சில மணிநேரங்களிலேயே ராஜ்யசபா சீட் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டது.
இதுதொடர்பாக தவெக தலைவரான முதல்வர் விஜய் வெளியிட்ட அறிவிப்பில், ''இம்மாதம் 18 ம் தேதி தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட உள்ள மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில், தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள அகில இநு்திய காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களை உறுப்பினர் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது'' என்று கூறியிருந்தார். இதன்மூலம் காங்கிரஸ் கட்சிக்கு ராஜ்யசபா சீட் வழங்கப்பட்டு இருப்பது உறுதியாகி உள்ளது.
இந்த ராஜ்யபசா எம்பி பதவியை பிடிக்க காங்கிரஸ் கட்சியில் தற்போது 2 பேர் இடையே கடும் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. ஒன்று பிரவீன் சக்கரவர்த்தி. இவர் ராகுல் காந்தியின் 'ரைட் ஹேண்ட்டாக' ஆக உள்ளார். காங்கிரஸ் கட்சியின் தரவுப் பகுப்பாய்வுத் துறையின் தலைவராக உள்ளார். இவருக்கும், விஜய்க்கும் நல்ல உறவு உள்ளது. தேர்தலுக்கு முன்பே காங்கிரஸ் - தவெக கூட்டணி அமைக்க வேண்டும் என்று விஜய்யை சந்தித்து பேசினார். ஆனால் அது நடக்கவில்லை. இருப்பினும் தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் - தவெக கூட்டணி அமைய முக்கிய நபராக இருந்தவர் பிரவீன் சக்கரவர்த்தி தான். இந்நிலையில் தான் அவர் ராஜ்யசபா எம்பி பதவியை எதிர்நோக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த லிஸ்ட்டில் 2வது இடத்தில் இருப்பவர் தமிழக காங்கிரஸ் கட்சியின் செல்வ பெருந்தகை. இவர் விரைவில் தனது காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மேலும் நடந்து முடிந்த தேர்தலிலும் ஸ்ரீபெரும்புதூர் சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு செல்வபெருந்தகை தோல்வியை தழுவினார். இந்த தொகுதியில் செல்வபெருந்தகை 93,365 வாக்குகள் வாங்கி 2ம் இடம் பிடித்த நிலையில் தவெக வேட்பாளர் தென்னரசு 1,47,611 வாக்குகள் வாங்கி வெற்றி பெற்றார்.
தற்போது செல்வபெருந்தகை எம்எல்ஏ பதவியை இழந்துள்ளதோடு, விரைவில் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை பறிகொடுக்க உள்ளார். இதனால் அவர் ராஜ்யசபா எம்பியாக முயன்று வருகிறார். செல்வபெருந்தகை ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் அதனடிப்படையில் தமிழக ராஜ்யசபா வேட்பாளராக தன்னை அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜுன கார்கே மூலம் காய்நகர்த்த தயாராகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இருப்பினும் இந்த ரேஸில் செல்வபெருந்தகையை விட பிரவீன் சக்கரவர்த்திக்கு தான் வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகிறது. ஒருவேளை 2 ஆண்டு மட்டுமே ராஜ்யசபா பதவி (ஏற்கனவே 4 ஆண்டுகளை சிவி சண்முகம் நிறைவு செய்துவிட்டார்) என்பதால் பிரவீன் சக்கரவர்த்தி மறுப்பு தெரிவித்தால் அதிர்ஷ்டம் செல்வபெருந்தகை பக்கம் வரலாம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். இதனால் தவெக தயவில் தமிழகத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியில் ராஜ்யசபா எம்பியாவது யார் என்பதை பார்க்க நாம் இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications