படக்கென சரிந்த டாஸ்மாக் வருவாய்.. மாற்றி யோசிக்கும் தமிழக அரசு! இறக்குமதியாகும் ’ஃபாரின்’ சரக்கு?
சென்னை: சமீபத்தில் 717 டாஸ்மாக் கடைகளை மூடியுள்ளதன் மூலம் தமிழக அரசுக்கு பெரும் நிதியிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக அரசின் வருவாயில் முக்கிய பங்கு வகிக்கும் டாஸ்மாக் நிறுவனத்தின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில், உலகளாவிய மற்றும் உயர்தர வெளிநாட்டு மதுபானங்களை விற்பனை செய்யும் திட்டம் குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டில் மதுபான விற்பனையை முழுமையாக டாஸ்மாக் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. ஆண்டுதோறும் அரசுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வருவாயை ஈட்டித்தரும் முக்கிய துறையாக இது இருந்து வருகிறது.

ஆனால் சமீப காலமாக டாஸ்மாக் விற்பனை மற்றும் வருவாயில் சில சவால்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. குறிப்பாக விஜய் தலைமையிலான தமிழக அரசு சமீபத்தில் 717 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான உத்தரவை பிறப்பித்தது.
டாஸ்மாக்
பொதுமக்களின் கோரிக்கை, கல்வி நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் உள்ள கடைகள் தொடர்பான புகார்கள் உள்ளிட்ட காரணங்களால் அதிக வருவாய் தந்த கடைகள் முழுமையாக மூடப்பட்டது. ஆனால் இதன் விளைவாக டாஸ்மாக் வருவாயில் கணிசமான பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
டாஸ்மாக் வருவாய்
அதிகாரிகள் தரப்பில் வெளியாகியுள்ள தகவலின்படி, 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் சில்லறை விற்பனையில் சுமார் 15 சதவீத பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்ட புதிய வழிகளை அரசு ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில், தற்போது பல உயர்தர மதுபானங்களை விரும்பும் வாடிக்கையாளர்கள் புதுச்சேரி, பெங்களூரு போன்ற இடங்களுக்கு சென்று வாங்குகின்றனர்.
வெளிநாட்டு மதுபானம்
குறிப்பாக வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் பிரபல பீர், விஸ்கி மற்றும் பிற உயர்தர மதுபானங்களுக்கு நகர்ப்புறங்களில் அதிக வரவேற்பு இருப்பதாக அதிகாரிகள் கருதுகின்றனர். இந்த சூழலில், அந்த சந்தையை தமிழ்நாட்டிற்குள்ளேயே கொண்டு வந்து வருவாயை அதிகரிக்க முடியுமா என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அதன்படி, உலகளாவிய பிரபல மதுபான பிராண்டுகளை டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரீமியம் லிக்கர்
எனினும், இந்த வகை மதுபானங்களை அனைத்து கடைகளிலும் உடனடியாக அறிமுகப்படுத்தும் திட்டம் இல்லை என கூறப்படுகிறது. முதற்கட்டமாக சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள சில உயர்தர வசதிகள் கொண்ட டாஸ்மாக் கடைகளில் மட்டுமே இந்த திட்டம் செயல்படுத்தப்படலாம் என அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில், இறக்குமதி செய்யப்பட்ட மதுபானங்களை பாதுகாப்பாக சேமிக்க குளிர்பதன வசதிகள் மற்றும் தரமான கிடங்கு வசதிகள் அவசியமாகும்.
மதுபான விற்பனை
இந்த உள்கட்டமைப்பு வசதிகள் உள்ள இடங்களில் மட்டுமே முதலில் விற்பனை தொடங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் நடப்பு நிதியாண்டில் கூடுதலாக ரூ.2,700 கோடி வருவாய் ஈட்ட மாநில அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கலால் வருவாயில் ஏற்பட்டுள்ள இழப்புகளை ஈடுகட்டுவதற்கான முக்கிய நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
நட்சத்திர ஹோட்டல்
இதற்கிடையில், தனியார் கிளப்புகள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் மதுபான விற்பனை தொடர்பான விதிமுறைகளையும் அரசு மறுஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. 1981-ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட தமிழ்நாடு மதுபான விதிகளின் கீழ் செயல்படும் கிளப்புகள் மற்றும் ஹோட்டல்கள் அனைத்து விதிமுறைகளையும் முறையாக பின்பற்ற வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டாஸ்மாக் கடை
மறுபுறம், இந்த திட்டம் சமூக வலைதளங்களில் கலவையான கருத்துக்களை உருவாக்கியுள்ளது. ஒருபுறம், மாநில வருவாயை அதிகரிக்கும் நடவடிக்கையாக இதை சிலர் வரவேற்கின்றனர். மற்றொரு புறம், மதுபான விற்பனையை மேலும் ஊக்குவிக்கும் முயற்சியாக இது மாறக்கூடும் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.
ஆனால் இதுவரை தமிழக அரசு சார்பில் வெளிநாட்டு மதுபானங்களை டாஸ்மாக் கடைகளில் அறிமுகப்படுத்துவது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. தற்போது அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை மற்றும் ஆய்வு நடைபெற்று வருவதாகவே தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications