கொளத்தூரில் தோற்றாலும்.. சேகர் பாபுவை கைவிடாத ஸ்டாலின்? சென்னையில் தவெகவிற்கு செக் வைக்கும் திமுக!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தோல்வியடைந்த நிலையில் தற்போது நடக்கும் சட்டசபை கூட்டத்தொடர் முடிவடைந்த பிறகு திமுகவில் பெரிய அளவில் உள்கட்சியில் அமைப்பு ரீதியாக மாற்றம் கொண்டு வர தலைமை முடிவெடுத்துள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் மற்றும் அதனை சுற்றுவட்டாரங்களில் மாவட்ட அளவில் கட்சி அமைப்புகளில் குறிப்பிடும்படியாக மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. கொளத்தூர் தொகுதியில் முக ஸ்டாலின் தோற்ற நிலையில் அந்த தொகுதியின் பொறுப்பாளர் சேகர் பாபுவிற்கு எதிராக விமர்சனங்கள் கிளம்பி இருந்தாலும் கூட அதனை புறம்தள்ளி அவரை அரவணைக்க முக ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தோல்வியடைந்தது. தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று அதன் தலைவர் விஜய் முதல்வராகி உள்ளார். இந்த தேர்தல் தோல்வியை திமுக எதிர்பார்க்கவே இல்லை. எப்படியாவது 2வது முறையாக ஆட்சியை பிடித்து விடலாம் என்று இருந்த முன்னாள் முதல்வர் ஸ்டாலினே தனது கொளத்தூர் தொகுதியில் தோற்கடிக்கப்பட்டார்.

இதனால் இந்த தோல்வியை திமுகவால் ஜீரணிக்க முடியவில்லை. எப்படியாவது கட்சியை பலப்படுத்த வேண்டும் என்று ஸ்டாலின் நினைக்கிறார்.
தேர்தல் தோல்விகளை ஆராய்வதற்காக முக ஸ்டாலினால் அமைக்கப்பட்ட குழுவினர் மாநிலம் முழுவதும், தொகுதி வாரியாக ஆய்வுகள் மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில் உள்கட்சி பூசல், தொகுதி வாரியாக இருந்த சவால்கள், பிரசார குறைபாடுகள், வாக்காளர்களின் மனநிலை குறித்த பல்வேறு விஷயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதனால் திமுகவில் அமைப்பு ரீதியாக மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. திமுக தரப்பில் கேட்டபோது, ''வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னதாக கட்சியை வலுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கட்சி சிறப்பாக செயல்படாததற்கு தீர்வு காணும் வகையில் மறுசீரமைப்பு செய்ய வேண்டி உள்ளது. இது மாநிலம் முழுவதும் நடக்கும்.
குறிப்பாக சென்னையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. ஏனென்றால் சென்னை திமுகவின் கோட்டையாக இருந்தது. ஆனால் இப்போது உடைக்கப்பட்டுள்ளது. சென்னையில் 16 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மாநிலத்தின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது இங்குள்ள சில கட்சி ரீதியான மாவட்டங்கள் ஒப்பீட்டளவில் சிறியவை.
எனவே, சென்னையில் உள்ள மூத்த தலைவர்கள் தலா 4 சட்டசபை தொகுதிகளை கவனிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கலாம். சென்னையை எடுத்து கொண்டால் முன்னாள் அமைச்சர்கள் சேகர்பாபு, மா. சுப்பிரமணியன் மற்றும் தாமோ அன்பரசன் உள்ளிட்ட சென்னையைச் சேர்ந்த மூத்த தலைவர்களிடம், பல சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய பெரிய அளவிலான கட்சிப் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட வாய்ப்புள்ளது.
அதேவேளையில் பிற பிராந்தியங்களில் உள்ள நிர்வாகிகள் தலா இரண்டு தொகுதிகளை உள்ளடக்கிய கட்சி மாவட்டங்களை தொடர்ந்து கண்காணிப்பார்கள். அதேபோல் கட்சியின் மாவட்ட தலைமைகளில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் எதிர்கால தேர்தலுக்கு ஏற்ப வாக்குச்சாவடி மற்றும் தொகுதி அளவிலான கட்டமைப்புகளை வலுப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.'' என கூறியுள்ளனர்.
தற்போது சென்னையில் உள்ள திமுகவின் சில மாவட்ட செயலாளர்களும், மூத்த தலைவர்களும் 5 முதல 6 சட்டசபை தொகுதிகளை கண்காணித்து வருகின்றனர். இவர்களில் ஒரு தொகுதி அல்லது 2 தொகுதிகளை மட்டுமே குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக கொளத்தூர் தொகுதியின் பொறுப்பாளராக செயல்பட்ட சேகர்பாபு தான் முக ஸ்டாலின் தேர்தல் தோல்விக்கு காரணம் என திமுகவினர் கூறி வரும் நிலையில் அவரை கைவிட ஸ்டாலின் மறுப்பதாக கூறப்படுகிறது. சென்னை போன்ற பெரு நகரங்களில் சேகர்பாபு போன்ற அரசியல்வாதிகளின் அனுபவம் நிச்சயம் தேவை என்பதை ஸ்டாலின் உணர்ந்து இந்த நடவடிக்கையை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
திமுகவில் இந்த மாற்றம் என்பது தற்போதைய சட்டசபை கூட்டத்தொடர் நிறைவடைந்தபிறகு நடக்க வாய்ப்புள்ளது. திமுகவை எடுத்து கொண்டால் சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் தேர்தல் முடிவுகள் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளன. திமுகவின் கோட்டையாக கருதப்பட்ட கொளத்தூர் தொகுதியில் முதல்வராக களமிறங்கிய முக ஸ்டாலின் தோல்வியடைந்தார். மொத்தம் 16 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் 14ல் திமுக தோற்றது. சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலினும், துறைமுகம் தொகுதியில் சேகர்பாபுவும் மட்டுமே வெற்றி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications