நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'!
தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் மற்றும் புதிதாக ஒப்புதல் அளிக்கப்பட்ட ரயில்வே திட்டப் பணிகளை வேகமாகச் செயல்படுத்தும் நோக்கில், தமிழக அரசு தற்போது ஒரு மிக முக்கியமான அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டிற்கான புதிய ரயில் திட்டப் பணிகளுக்கு நிலம் கையகப்படுத்துவதில் இனி எந்தவிதமான சிக்கலோ அல்லது கால தாமதமோ இருக்கக்கூடாது என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மாநில அரசு திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பாக, முக்கியத் துறைகளை ஒன்றிணைத்து, ரயில்வே பணிகளுக்கான நில ஒதுக்கீட்டை மிக விரைவாக முடிக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களையும் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

75% நிலம் இன்னும் கிடைக்கவில்லை
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட வேண்டிய புதிய ரயில் திட்டங்களுக்குத் தேவையான ஒட்டுமொத்த நிலத்தில், சுமார் 75 சதவீதம் வரை இன்னும் ஒதுக்கீடு செய்யப்படாமல் நிலுவையில் உள்ளதாகத் தெற்கு ரயில்வே (Southern Railway) தரப்பில் தமிழ்நாட்டு அரசுக்க தெரிவிக்கப்பட்டிருந்தது.
ரயில்வே திட்டங்களுக்கான நிலத்தை விரைந்து ஒதுக்கீடு செய்து தருமாறு தெற்கு ரயில்வே விடுத்திருந்த அவசரக் கோரிக்கையின் அடிப்படையிலேயே, தற்போது தமிழக அரசு இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தம் 22,808 கோடி ரூபாய் மாபெரும் மதிப்பீட்டில், 1,700 கிலோமீட்டர் தூரத்திற்கு ஒன்பது புதிய ரயில் பாதைகள் மற்றும் மூன்று இரட்டை ரயில் பாதை திட்டங்கள் உட்பட மொத்தம் 15 புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு மத்திய ரயில்வே துறை நிதி உதவி வழங்கி, அந்தப் பணிகளை தற்போது மேற்கொண்டு வருகிறது.
பல ஆண்டுகளாகத் தாமதம்
தமிழ்நாட்டில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு ரயில்வே திட்டங்களுக்கு ஒட்டுமொத்தமாக 4,326 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. ஆனால், இதில் 3,274 ஹெக்டேர் நிலம் இன்னும் கையகப்படுத்தப்படாத ஒரு சூழல் நீடித்து வருகிறது. இதன் காரணமாக மதுரை - அருப்புக்கோட்டை - தூத்துக்குடி திட்டம், திண்டிவனம் - செஞ்சி - திருவண்ணாமலை திட்டம், சென்னை - புதுச்சேரி - கடலூர் திட்டம், ஆவடி - ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி திட்டம், தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை திட்டம் மற்றும் ராமேஸ்வரம் - தனுஷ்கோடி உள்ளிட்ட பல்வேறு முக்கிய ரயில் பாதை திட்டங்கள் பல ஆண்டுகளாகக் கடுமையான கால தாமதத்தைச் சந்தித்து வருகின்றன. நிலப் பற்றாக்குறை காரணமாகப் பல பணிகள் இன்னும் முழுமையாகத் தொடங்கப்படாமல் முடங்கிக் கிடப்பதும் குறிப்பிடத்தக்கது.
5 முக்கிய துறைகளை ஒருங்கிணைக்கும் தமிழக அரசு
தமிழ்நாட்டில் முடங்கிக் கிடக்கும் இந்த 15 முக்கிய ரயில் திட்டங்களுக்கும் தேவையான நிலங்களை விரைந்து கையகப்படுத்தித் தருமாறு மாநில அரசுக்கும், தமிழக முதலமைச்சர் விஜய்க்கும் தெற்கு ரயில்வே தரப்பில் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாகக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
அந்தக் கடிதத்தின் அடிப்படையில் தற்போது அதிரடியாகக் களம் இறங்கியுள்ள தமிழக அரசு, முக்கியத் துறைகளை ஒருங்கிணைத்து நிலங்களை விரைந்து கையகப்படுத்திக் கொடுப்பதில் தீவிரக் கவனம் செலுத்தி வருகிறது.
இதற்காகப் போக்குவரத்துத் துறை, வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் நீர் வளத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைசார் அதிகாரிகளை ஒன்றிணைத்துச் செயல்படுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரயில்வே திட்டங்களுக்காகக் குறிக்கப்பட்ட இடங்களில் ஏதேனும் மாநில அரசு சார்ந்த திட்டப் பணிகள் தற்போது நடைபெறுகிறதா என்பதை ஆட்சியர்கள் நேரடியாகக் கண்காணித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அதன் பிறகாக எந்தவிதத் தடையுமின்றி உடனடியாகத் தேவையான நிலத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் பல்வேறு முக்கிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
75 சதவீத நிலம் இன்னும் கையகப்படுத்தப்படாமல் உள்ள சூழலை மாற்றி, பணிகளை முடுக்கிவிடுவதே இந்த உத்தரவின் முக்கிய நோக்கமாகும்.












Click it and Unblock the Notifications