சென்னை டிராபிக் ஓவர்.. ரூ. 530 கோடியில் களமிறங்கும் அதிநவீன.. இன்டெலிஜென்ட் டிரான்ஸ்போர்ட் சிஸ்டம்
சென்னை: சென்னை மாநகரின் மிக முக்கியப் பிரச்சனைகளில் ஒன்றான போக்குவரத்து நெரிசலுக்கு (Traffic Congestion) முற்றுப்புள்ளி வைக்க, மத்திய அரசு ஒரு பிரம்மாண்ட உள்கட்டமைப்பு திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை பெருநகரப் பகுதியில் ரூ. 530 கோடி மதிப்பீட்டிலான 'நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பு' (Chennai Intelligent Transport System - CITS) திட்டத்தை செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த அதிநவீன தொழில்நுட்பத் திட்டம் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை (JICA) நிதியுதவியுடன், சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை போக்குவரத்து காவல்துறை ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் வரும் ஆகஸ்ட் 2026-க்குள் முழுமையாக பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
சென்னையின் ஒட்டுமொத்த போக்குவரத்து மேலாண்மையையும் டிஜிட்டல் மயமாக்கும் நோக்கில் இந்த சிஸ்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் மூன்று மிக முக்கியமான கூறுகள் செயல்படுத்தப்பட உள்ளன:
அடாப்டிவ் டிராபிக் கன்ட்ரோல் சிஸ்டம் (Adaptive Traffic Control System):
வழக்கமான சிக்னல்கள் போல இல்லாமல், சாலையில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கையை சென்சார்கள் மற்றும் கேமராக்கள் மூலம் நிகழ்நேரத்தில் (Real-time) கணக்கிட்டு, அதற்கேற்ப சிக்னல் நேரத்தை இந்த சிஸ்டம் தானாகவே மாற்றியமைக்கும். சென்னையின் 165 முக்கிய சந்திப்புகளில் (Junctions) இந்த AI அடிப்படையிலான சிக்னல்கள் அமைக்கப்பட உள்ளன.
நிகழ்நேர தகவல் அமைப்பு (Real-Time Information System):
இதன் மூலம் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுப் போக்குவரத்து பயணிகள் நேரடிப் பலன்களைப் பெறுவர். மாநகரப் பேருந்துகளில் ஜிபிஎஸ் (GPS) பொருத்தப்பட்டு, பேருந்து நிலையங்களில் உள்ள டிஜிட்டல் திரைகளில் பேருந்துகள் வரும் துல்லியமான நேரம் (Estimated Time of Arrival) காட்டப்படும். மேலும், 17 முக்கிய இடங்களில் டிஜிட்டல் தகவல் பலகைகள் (Variable Message Signs) அமைக்கப்பட்டு, விபத்து அல்லது நெரிசல் குறித்த தகவல்கள் வாகன ஓட்டிகளுக்கு முன்கூட்டியே எச்சரிக்கப்படும்.
மத்திய கட்டளை மையம் (Central Command Centre):
சென்னை போக்குவரத்து காவல்துறையுடன் இணைந்து ஒரு பிரம்மாண்ட ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்படும். இதன் மூலம் நகரின் ஒட்டுமொத்த டிராபிக் நிலவரமும் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு சீரமைக்கப்படும்.
விதிகளை மீறுவோருக்கு செக்:
இந்த நுண்ணறிவு அமைப்பின் கீழ், போக்குவரத்து விதிமீறல்களைக் கண்டறியும் தொழில்நுட்பமும் புகுத்தப்பட உள்ளது. அதன்படி, 58 சந்திப்புகளில் விபத்து மற்றும் அசம்பாவிதங்களைக் கண்டறியும் அமைப்பும் (Incident Detection System), 50 முக்கிய சந்திப்புகளில் சிக்னலை மீறிச் செல்லும் வாகனங்களை தானாகவே படம் பிடித்து அபராதம் விதிக்கும் ரெட் லைட் வயலேஷன் டிடெக்ஷன் சிஸ்டமும் (Red Light Violation Detection) நிறுவப்பட உள்ளன.
தற்போது 100-க்கும் மேற்பட்ட சந்திப்புகளில் இதற்கான ஆரம்பகட்ட சிவில் பணிகள் மற்றும் சந்திப்பு மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதற்கான தகவல் தொடர்பு உள்கட்டமைப்பு மற்றும் மின் இணைப்புகள் வழங்கும் பணிகள் தற்போது போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் 2026-ல் இந்த சிஸ்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்போது, சென்னை மக்களின் பயண நேரம் பாதியாகக் குறைவதோடு, சாலைப் பாதுகாப்பும் பன்மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications