"தீட்டு என்பதே மனித குலத்துக்கு எதிரானது”.. திருப்பரங்குன்றம் வழக்கில் ஐகோர்ட்டில் தமிழக அரசு வாதம்!
மதுரை: தீட்டு என்பதே மனித குலத்துக்கு எதிரானது என்று ஐகோர்ட் மதுரை கிளையில் அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கில் தமிழக அரசு பரபர வாதங்களை முன்வைத்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பாக மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் இஸ்லாமியர்கள் கந்தூரி கொடுப்பதை எதிர்த்து இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சிக்கந்தர் பாதுஷா தர்காவில் ஆடு, கோழியுடன் ஏறக் கூடாது என்று காவல்துறை தரப்பில் உத்தரவிடப்பட்டது சர்ச்சையாக வெடித்தது.

திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தமானது மற்றும் நில பயன்பாடு தொடர்பான வழக்குகள் உள்ளன. ஒரு தரப்பினர் மலையை சமணர் குன்று என்று அறிவிக்கக் கோரியும், மற்றொரு தரப்பினர் கோயிலுக்கு சொந்தமானது என்று வாதிட்டனர்.
இந்த வழக்கு ஏற்கனவே உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தபோது, ஒன்றிய தொல்லியல் துறையிடம் இது தொடர்பாக மனு அளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டிருந்தது. ஆனால் மத்திய தொல்லியல் துறை அதிகாரிகளிடம் இது தொடர்பாக மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுதாரர் தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கில் 3வது நீதிபதி விஜயகுமார் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. சிக்கந்தர் மலை என்று அழைப்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது? ஆடு, கோழி பலியிடுவதற்கு, கந்தூரி நடத்துவதற்கு அனுமதி உண்டா. நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த அனுமதி இருக்கிறதா என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
நீதிபதியின் கேள்விகளுக்கு வருவாய் ஆவணங்களுடன் அரசு தரப்பில் ஐகோர்ட் கிளையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், தீட்டு என்பதே மனித குலத்துக்கு எதிரானது. தீட்டு என்பது ஜாதியிலோ, மதத்திலோ, மனிதர்களுக்கு உள்ளேயோ இருக்கவே கூடாது என்று அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.
மலையில் ஆடு, கோழி பலியிடுவதால் புனிதம் கெட்டு, தீட்டுப்படும்" என மனுதாரர்கள் தரப்பு வாதம் செய்தனர். அதற்கு, அழகர் கோயிலில் பதினெட்டாம்படி கருப்புக்கு கிடா வெட்டிய பிறகுதான் பெருமாளை பக்தர்கள் தரிசிக்கின்றனர். அப்படி இருக்கையில் இது எப்படி தீட்டாகும்? என்றும் அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.
இதையடுத்து மத்திய தொல்லியல் துறை தரப்பு வாதங்களுக்காக வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications