'நடப்பது குப்பை தேர்தல் ..அல்வா கிண்ட ரெடியா இருக்காங்க.. சூதானம் மக்களே'.. சொல்வது செல்லூர் ராஜூ
மதுரை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வார்டு வரையறை செய்யப்பட்டபடி, ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.
வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலும் நிறைவு பெற்று விட்டது. திமுக, அதிமுக, பாஜக என அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசார த்தில் ஈடுபட்டு வருகின்றன,
சூடுபிடித்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் மதுரையில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மதுரை 43வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் கண்ணன் என்பவருக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொணட செல்லூர் ராஜூ கூறியதாவது:-
அதுவும் சரியில்லை
திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை 9 மாதம் ஆன நிலையில் எதுவுமே நிறைவேற்றவில்லை. அதிமுக ஆட்சியில் ரூ.5000 கொடுக்க சொன்னார்கள். ஆனால் இப்போது அவர்கள் ஏதும் கொடுக்கவில்லை. சரி.. பொங்கல் தொகுப்பாவது நன்றாக இருந்ததா.. அதுவும் சரியில்லை இந்த தேர்தல் எதற்காக நடைபெறுகிறது, தெருவிளக்கு, சாக்கடை, தண்ணீர் பிரச்னையை சரி செய்வதற்காக நடக்கிறது.
வீட்டுக்கே போய் கேட்கலாம்
அதிமுக வேட்பாளர் முருகனை வெற்றி பெற வைத்தால் வார்டில் எந்த பிரச்னையாக இருந்தாலும் அவர் வீட்டுக்கே போய் கேட்கலாம். ஆளும் கட்சியினர் 43 வது வார்டில் கட்சிக்காரர் ஒருவரை நிறுத்தாமல் 10 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள வார்டில் இருந்து ஒருவரை நிறுத்தி உள்ளனர்.அவரிடம் மாவு அதிகமாக உள்ளதால் நிறுத்தி உள்ளனர்.
குப்பைத்தேர்தல்
அவர் நிறைய பணம் மற்றும் ரவுடித்தனம் செய்வார் என்பதால் நிறுத்தி உள்ளனர். இந்த தேர்தல் குப்பைத்தேர்தல். அந்த தேர்தலுக்கு கூட வேட்பாளரை இறக்குமதி செய்துள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களை ஏமாற்ற நினைக்கிறார். இந்த ஆட்சியை அப்புறப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த தேர்தலில் மக்கள் பாடம் கற்பிக்காவிட்டால் அல்வா கிண்டி விடுவார்கள் என்று செல்லூர் ராஜூ பேசினார்.