ரூ.5 லட்சத்துக்கு குழந்தைகளை விற்ற விவகாரம்: தனியார் காப்பகத்தின் உரிமையாளர் உள்பட 2 பேர் கைது!
மதுரை: தனியார் காப்பகத்தில் சட்டவிரோதமாக குழந்தை விற்ற விவகாரம் தொடர்பான வழக்கில் தலைமறைவாக இருந்த தனியார் காப்பகத்தின் உரிமையாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை ரிசர்வ்லைன் பகுதியில் செயல்பட்டு வந்த இதயம் அறக்கட்டளைக்கு சொந்தமான ஆதரவற்றோர் மையத்திலிருந்து இரு குழந்தைகள் ரூ.5 லட்சம் பணத்திற்கு விற்பனை செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்தது.

சட்டவிரோதமாக குழந்தைகளை வாங்கிய மதுரை பகுதியை சேர்ந்த சகுபர்சாதிக் - அனிஸ்ராணி, இஸ்மாயில்புரம் பகுதியை சேர்ந்த கண்ணன் - பவானி மற்றும் இதயம் அறக்கட்டளை மையத்தின் ஒருங்கிணைப்பாளரான கலைவாணி, முகவர்களாக செயல்பட்டு வந்த செல்வி, ராஜா என 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
செல்வி என்ற இடைத்தரகர், ஆட்சியர் அலுவலகத்தில் இந்தியன் ரெட் கிராஸ் அமைப்பில் தன்னார்வலராக இருக்கிறேன் எனக்கூறி வலம் வந்ததாகவும், ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் குழந்தையில்லா தம்பதிகளை அவர் மூளை சலவை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.மேலும், குழந்தைகளை விற்பனை செய்ய கமிஷனாக ரூ.20 ஆயிரம் பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது
இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட சமூக நல ஆய்வாளர்கள் ஆய்வு செய்து 15 நாட்களில் அறிக்கை தர உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான இதயம் அறக்கட்டளை நிறுவனர் சிவக்குமார் மற்றும் அவரது உதவியாளர் மாதார்ஷா ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் இவர்கள் இருவரையும் தமிழ்நாடு-கேரள எல்லையில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களை மதுரைக்கு அழைத்து வந்து குழந்தை விற்பனை தொடர்பாக என்ன நடந்தது? இதில் வேறு யாரும் முக்கிய புள்ளிகள் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications