+2 பொதுத்தேர்வு எழுதச் சென்ற மாணவிக்கு நேர்ந்த சோகம்.. முதல் தேர்வு அன்றே சாலை விபத்தில் பலி!
மதுரை: மதுரையில் +2 பொதுத்தேர்வு எழுத உறவினருடன் பைக்கில் சென்ற மாணவி சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பைக்கில் இருந்து தவறி கீழே விழுந்தபோது அரசுப் பேருந்து மோதியதில் படுகாயமடைந்த மாணவி துர்கா தேவி (17) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த கல்வி ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று தொடங்கி உள்ளது. தமிழகம் முழுவதும் 3,412 மையங்களில் 8 லட்சம் மாணவ, மாணவிகள், 27,783 தனித் தேர்வர்கள், 281 கைதிகள் என மொத்தம் 8 லட்சத்து 27 ஆயிரத்து 475 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

முதல் நாளான இன்று தமிழ் மற்றும் இதர மொழித்தாள் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. +2 பொதுத் தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கியது. மதியம் 1.15 மணிக்கு முடிவடைகிறது. வரும் மார்ச் 26 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகிறது. தேர்வு கண்காணிப்பு பணியில் 44,624 ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில் மதுரை மாவட்டம் அல்லிக் குளத்தில் பைக் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதச் சென்ற மாணவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிளஸ் 2 பொது தேர்வு எழுத மாணவி துர்கா தேவி (17) உறவினருடன் பைக்கில் சென்ற போது அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற மாணவி துர்கா தேவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தொடர்ந்து துர்கா தேவியின் உடல் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். +2 பொதுத்தேர்வு எழுதச் சென்ற மாணவி விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications