மதுரையில் ரயிலில் தீ விபத்து: கள்ளச்சந்தையில் வாங்கிய சிலிண்டர் தான் காரணமா? வெளியான திடுக் தகவல்!
மதுரை: மதுரையில் சுற்றுலா ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட கள்ளச்சந்தையில் வாங்கிய சிலிண்டர் தான் காரணம் என்று விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெறுகிறது.
உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து ராமேஸ்வரம் செல்வதற்காக பயணிகள் பலர் சுற்றுலா ரயிலில் தமிழகம் வந்திருந்தனர். இந்த ரயில் கடந்த 25 ஆம் தேதி இரவு மதுரை ரயில் நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கி.மீ தொலைவில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், நேற்று முன் தினம் அதிகாலை அந்த ரயில் பெட்டியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி உத்தர பிரதேசத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர்.

இதேபோல சிலர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து ஒரு ரெயில் பெட்டியை வாடகைக்கு பிடித்து 63 பேர் கொண்ட குழுவினர் தங்களுடன் 5 சமையல்காரர்களையும் அழைத்து வந்து இருக்கிறார்கள். அதிகாலை 5.15 மணி அளவில், அந்த குழுவினருடன் வந்த சமையல்காரர்கள் ரயில் பெட்டிக்கு உள்ளேயே ஓரிடத்தில் கியாஸ் அடுப்பை பற்ற வைத்து டீ போட்டுள்ளனர்.
அப்போது தான் சிலிண்டர் வெடித்து தீ பிடித்து விபத்து ஏற்பட்டதாக தெற்கு ரயில்வே தரப்பு தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் நாசேவேலை எதுவும் இல்லை என்றும் ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் உறுதி செய்தனர். இதனிடையே, ரயில் தீ விபத்து தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி நேற்று விசாரணை நடத்தினார். மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலக மாநாட்டு அரங்கில் விசாரணை நடைபெற்றது.
இரண்டாவது நாளாக இன்றும் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விசாரணை மேற்கொண்டுள்ளார். சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்து இருந்த நிறுவனத்தின் ஊழியர்களே சிலிண்டரை எடுத்து வந்தததாக சொல்லப்படுகிறது. எனவே, அவர்களுக்கு சிலிண்டர் கொடுத்தது யார்? எந்த ரயில் நிலையத்தில் வைத்து சிலிண்டரை ஏற்றினார்கள் என்ற அடிப்படையில் விசாரணை நடைபெற்றது.
மதுரையில் சுற்றுலா ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட கள்ளச்சந்தையில் வாங்கிய சிலிண்டர் தான் காரனம் என்று விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. இதில் 5 பேர கைது செய்துள்ளனர். 5 பேரும் சம்மந்தப்பட்ட சுற்றுலா நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் ஆவர். அதில் 2 பேர் சமையல் காரர்கள், இவர்கள் லக்னோவில் இருந்து வரும் போதே இரண்டு சிலிண்டர்களை கொண்டு வந்து இருக்கிறார்கள்.

அதேபோல், அடுப்புகளும் விறகுகளும் கொண்டு வந்து இருக்கிறார்கள். மண்ணெண்ணெயும் கொண்டு வந்து இருக்கிறார்கள். கன்னியாகுமரியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது சட்ட விரோதமாக சிலிண்டர் வாங்கியிருக்கிறார்கள். கள்ளசந்தையில் வாங்கிய சிலிண்டரில் கசிவு இருந்ததாகவும் அதை வைத்து சமைக்கும் போதுதான் இந்த அசம்பாவிதம் நடைபெற்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சுற்றுலா நிறுவன ஊழியர்களிடம் ரயில்வே காவல் துறை நடத்திய விசாரணையில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. அவர்கள் யாரிடம் இருந்து வாங்கினார்கள் என்பது குறித்து விசாரணை நடப்பதாக தெரிகிறது. தற்போது சுற்றுலா நிறுவன ஊழியர்கள் 5 பேரிடமும் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலைக்குற்றம் ஆகாத மரணத்தை விளைவிக்கும் குற்றத்தை செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications