தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு இருக்கு.. அமைச்சரவையில் அமமுக இடம்பெற ஆசை.. டிடிவி தினகரன்!
மதுரை: தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி சாத்தியம் இல்லை என்று சொல்ல முடியாது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அமைச்சரவையில் இடம்கிடைக்க வேண்டும் என்பது எனது ஆசை என்று கூறிய டிடிவி தினகரன், அதற்காக எந்த நிபந்தனையும் வைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், அதிமுக - பாஜக கூட்டணியில் அமமுக இணைந்திருக்கிறது. டிடிவி தினகரன் அண்ணன் எடப்பாடி பழனிசாமி என்று அழைக்க, மறுபக்கம் எடப்பாடி பழனிசாமி சகோதரர் டிடிவி தினகரன் என்று பாச மழையை பொழிந்து வருகிறார்கள். அதேபோல் சட்டசபைத் தேர்தலில் டிடிவி தினகரன் போட்டியிடப் போவதில்லை என்று விலகி இருக்கிறார்.

இதனால் அமமுகவுக்கு குறைந்த அளவிலான தொகுதிகளே ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து டிடிவி தினகரன் பேசுகையில், செங்கோட்டையன் மீது மிகப்பெரிய மரியாதை உள்ளது. நான் மீண்டும் அதிமுக கூட்டணிக்கு செல்ல மாட்டேன் என்று நம்பிக் கொண்டிருந்தார். டெல்லியில் இருந்தும் செங்கோட்டையனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதனையும் செங்கோட்டையனிடம் கூறினேன். ஆனால் அவர் தவெகவுக்கு வந்துவிட்டேன் என்று கூறினார். ஓபிஎஸ் எனக்கு நெருங்கிய நண்பர் தான். ஆனால் மூத்த நிர்வாகிகளிடம் நாம் போய் பேச முடியாது. அதேபோல் என்னால் திமுக பக்கம் எல்லாம் செல்ல முடியாது. நட்பு ரீதியாக மட்டுமே பழகுவேன். ஓபிஎஸ் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் என்று விரும்புகிறேன்.
ஆனால் இறுதி முடிவை ஓபிஎஸ் தான் எடுக்க வேண்டும். அதிமுகவை ஏற்றுக்கொள்ள கூடாது என்று அமமுகவில் யாரும் சொல்லவில்லை. எங்களுக்குள் சண்டை வந்து பிரிந்தோம். இப்போது கூட்டணி அமைந்துவிட்டதால், எளிதாக இணைந்துவிட்டோம். நாங்கள் அதிமுக குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். எனக்காக 8 ஆண்டுகள் என்னுடன் பயணித்தவர்களுக்கு பதவி கிடைக்க வேண்டும்.
அவர்கள் சட்டசபை உறுப்பினர்களாக வர வேண்டும்.. அவர்கள் அமைச்சராக வேண்டும் என்பது ஆசை.. அமைச்சர் பதவி கொடுக்க வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைவதற்கான வாய்ப்பு உள்ளதாக பலரும் என்னிடம் கூறி வருகின்றனர். 2024ல் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் பாஜக கூட்டணிக்கு சென்றேன். கூட்டணியில் உள்ள கஷ்டம், நஷ்டம் நன்றாக அறிவேன்.
அதனால் கூட்டணியில் எங்களால் எந்த பிரச்சனையும் வரக் கூடாது. நியாயமான, தகுதியான வேட்பாளர்களுக்கெ தொகுதிகள் கேட்போம். கூட்டணி ஆட்சி என்பது என்னுடைய ஆசை.. அது நிபந்தனையாக வைக்கவில்லை. என்டிஏ கூட்டணிக்குள் ஓபிஎஸ் மற்றும் இன்னும் சில கட்சிகள் வரலாம் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications