1 மணி நேரம் தான் டைம்.. காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு.. தவெக நிர்வாகிகள் ஷாக்
மதுரை: தவெக இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நாளை நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. தவெகவினர் இந்த மாநாட்டை மிகவும் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு அடுத்தடுத்து நெருக்கடிகள் சூழ்ந்து வருகின்றன. மாநாட்டை முன்னிட்டு மதுரையில் தவெகவினர் அதிகளவு பேனர்களை வைத்துள்ளனர். இந்நிலையில் அனுமதி பெறாத பேனர், பிளக்ஸ், கட் அவுட் ஆகியவற்றை 1 மணி நேரத்தில் அகற்ற வேண்டும் என்று மதுரை காவல் ஆணையருக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஜய் தொடங்கிய தவெக கட்சியின் முதல் மாநாடு கடந்த வருடம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நாளை நடைபெறும் என்று தவெக தலைவர் விஜய் அறிவித்திருந்தார். 2026 சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்த மாநாடு அரசியல் ரீதியாக அதிக கவனம் ஈர்த்துள்ளது. மாநாட்டு திடலில் சுமார் 100 அடி உயரத்தில் வைக்கப்பட்டிருந்த தவெக கொடி கம்பம், கார் மீது விழுந்து சேதத்தை ஏற்படுத்தியது.

அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் தவெகவினருக்கு மற்றொரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ள்து. நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த அருளரசு என்பவர், "மக்கள் பயன்படுத்தும் நடைபாதை மற்றும் பொதுப்பாதைகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக பேனர், பிளக்ஸ்கள் வைக்கப்படுகின்றன.
இது பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. எனவே அவற்றை அகற்றி, பேனர் வைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம் சுப்ரமணியம், அருள் முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், "சட்டவிரோத பேனர்கள் அகற்றப்பட்டுள்ளது." என்று கூறினர்.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், மதுரை சென்று தற்போது வைக்கப்பட்டுள்ள பேனர்களை ஆய்வு செய்ய சொன்னார்கள். தவெக மாநாட்டை முன்னிட்டு மதுரை முழுவதும் பேனர், பிளக்ஸ், கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், "அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள சட்டவிரோத பேனர், பிளக்ஸ், கட்அவுட்களை 1 மணி நேரத்தில் அகற்றி தகவல் அளிக்க வேண்டும்." என்று, மதுரை காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து காவல்துறையினர் சட்ட விரோத பேனர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மாநாட்டை முன்னிட்டு தவெகவினர் மிகுந்த உற்சாகத்துடன் உள்ள நிலையில், அடுத்தடுத்த நெருக்கடி சம்பவங்களால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications