தவெக மாநாடு: பரபரக்கும் பாரபத்தி.. தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
மதுரை: மதுரை மாவட்டம், பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு நாளை பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நாளை மாநாடு நடைபெறும் பகுதியின் அருகே உள்ள தனியார் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை மாவட்டம், பாரபத்தியில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. ஆகஸ்ட் 21 ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி இரவு 7.30 மணிக்குள் மாநாட்டை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சுமார் 500 ஏக்கரில் மாநாட்டு திடல் தயார் நிலையில் உள்ளது. அதேபோல் நிர்வாகிகள் வரும் வாகனங்களை நிறுத்துவதற்காக பிரத்யேகமாக 6 பார்க்கிங் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தவெக தலைவர் விஜய் மக்களைச் சந்தித்துப் பேசும் வகையில் மிகப்பெரிய மேடை மற்றும் ராம்ப் அமைக்கப்பட்டுள்ளது.
நாளை பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி இரவு 7.30 மணி வரை மாநாடானது நடைபெறவுள்ளது. பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் மாநாடு தொடங்கவுள்ளது. கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. தஞ்சாவூர், மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்கள் கலைநிகழ்ச்சிகளை நடத்தவுள்ளனர். மாலை 4 மணிக்கு த.வெ.க. தலைவர் விஜய் விழா மேடைக்கு வந்து, பொதுமக்கள், தொண்டர்கள் மத்தியில் உரையாற்றவுள்ளார்.
மொத்தமாக 1.5 லட்சம் இருக்கைகள் மாநாட்டுத் திடலில் போடப்பட்டுள்ளது. அதேபோல் விஜய் நடந்து வந்து தொண்டர்களைப் பார்ப்பதற்கான ஏற்பாடுகள் முடிந்துள்ளன. கொள்கைத் தலைவர்களுக்கான பேனர்கள், தவெக கொடி உள்ளிட்டவை நடப்பட்டுள்ளது. அதேபோல் நாளை தவெக தலைவர் விஜய், மாநாட்டுத் திடலில் தவெக கொடியை ஏற்றி வைத்து மாநாட்டைத் தொடங்கி வைக்க உள்ளார். மாநாட்டில் த.வெ.க. விஜயின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மாநாட்டுக்கு தொண்டர்கள், பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் என லட்சக்கணக்கிலான மக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பாரபத்தி பகுதியில் நாளை பொதுமக்களின் கூட்டம் மற்றும் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் காணப்படும். இதனால், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் இடையூறு ஏற்ப மாநாடு நடைபெறும் பகுதியின் அருகே உள்ள காரியாபட்டி, ஆவியூர் பகுதிகளில் அமைந்துள்ள தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications