TVK Maanadu: தவெக மாநாடு அரங்கத்தில் QR Code அட்டைகள்.. ஸ்கேன் செய்தால் என்ன நடக்குது பாருங்க!
மதுரை: நாளை மதுரையில் நடைபெறும் தவெக மாநாட்டிற்கு செல்பவர்கள், மாநாட்டில் பங்கேற்றதை உறுதி செய்வதற்காக, ஆங்காங்கே QR Code அட்டைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனை ஸ்கேன் செய்வதன் மூலம் மாநாட்டில் பங்கேற்றதற்கான வருகையை பதிவு செய்து சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாட்டிற்கு பங்கேற்பாளர்களின் பதிவை ஒழுங்குபடுத்தவும், பங்கேற்பாளர்கள் எண்களைக் கண்காணிக்கவும், தவெக மாநாட்டு அரங்கில் QR குறியீடு அட்டைகள் வைக்கப்பட்டுள்ளன.

தவெக மாநில மாநாடு
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான ஆயத்தப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. திமுக, அதிமுக போன்ற பலமான கட்சிகளுக்கு எதிராக இந்த சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தவெக களமிறங்கியுள்ளது. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு நாளை நடைபெறுகிறது.
க்யூ ஆர் கோடு
மதுரை பாரபத்தியில் நாளை நடக்கும் இந்த மாநாட்டிற்காக கடந்த இரண்டு மாதங்களாக பணிகள் நடந்து வருகிறது. மாநாட்டு திடலின் பல்வேறு பகுதிகளில் கியூ.ஆர் கோடு புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது. இதனை மொபைல் போன் மூலம் ஸ்கேன் செய்தால் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரத்யேக பக்கத்திற்கு லிங்க் செல்கிறது. அதில் "வணக்கம் தோழரே, தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் மாநில மாநாட்டிற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜியோ லொக்கேஷன்
மேலும் உங்கள் மாநாட்டு வருகையை உறுதிப்படுத்த, உங்களது இருப்பிடத் தகவல் எங்களுக்கு தேவையாக உள்ளது. தயவுசெய்து, உங்கள் இருப்பிடத்தைப் பகிர்வதற்கு உங்கள் சம்மதத்தை வழங்கவும் எனக் கேட்கிறது. ஜியோ லொக்கேஷன் ஆன் செய்து விட்டால் நம்முடைய இருப்பிடத்தை சரியாக கண்டறிந்து விடுகின்றனர்.
பின்னர் நம்முடைய 10 இலக்க மொபைல் எண்ணும் கேட்கப்படுகிறது. அதனை உள்ளீடு செய்தால் 6 இலக்க OTP வரும். அதை சரியாக பதிவு செய்தால் பெயர், புகைப்படம் ஆகியவற்றை கேட்கிறது. இவற்றை உள்ளீடு செய்தால் நம்முடைய இடத்தை ஒருமுறை சரிபார்த்து கொள்கிறது.

25 கி.மீட்டர் சுற்றளவுக்குள்
மாநாடு நடைபெறும் இடத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் சுற்றளவில் இருந்தால் மட்டுமே பங்கேற்றதாக எடுத்து கொள்கிறது. அதன் பிறகு சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்.
இல்லையெனில் "மன்னிக்கவும்...! நீங்கள் விழா நடைபெறும் இடத்தில் இருந்து வெகு தொலைவில் உள்ளீர்கள். விழா நடைபெறும் இடத்தில் இருந்து 25 கி.மீ சுற்றளவில் மட்டுமே வருகை பதிவேட்டை பதிவேற்ற முடியும்" என்ற தகவல் வருகிறது.
இந்த க்யூ ஆர் கோடை யார் வேண்டுமானாலும் ஸ்கேன் செய்து, மாநாட்டுக்கு வருகை தந்ததாக பதிவிட முடியும் என பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். ஆனால், இந்த க்யூ ஆர் கோடு பதிவு ஜியோ லொக்கேஷனை அடிப்படையாகக் கொண்டது என்பதால், மாநாடு நடைபெறும் இடத்துக்கு அருகில் உள்ளவர்கள் மட்டுமே இதில் பதிவு செய்ய முடியும் என்கின்றனர் தவெக கட்சியினர்.












Click it and Unblock the Notifications