TVK Vijay: மதுரை மாநாட்டில் 35 நிமிடங்கள் பேசிய விஜய்.. விக்கிரவாண்டியில் 46 நிமிடம் பேசினார்!
மதுரை: தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரை அருகே பாரபத்தியில் இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் உரையாற்றிய தவெக தலைவர் விஜய் 35 நிமிடங்களில் தனது உரையை நிறைவு செய்துள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற தவெகவின் முதல் மாநில மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய், சுமார் 46 நிமிடங்கள் உரையாற்றி இருந்தார்.

35 நிமிடங்கள் பேசிய விஜய்
இன்று மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாட்டில் உரையாற்றிய தவெக தலைவர் விஜய், 35 நிமிடங்கள் மாநாட்டு மேடையில் உரையாற்றியுள்ளார். இன்று மாலை 4.50 மணிக்கு உரையை தொடங்கிய விஜய், 5.25 மணி வரை பேசி உரையை நிறைவு செய்துள்ளார்.
விஜய் பேச்சு
தவெக மாநாட்டில் பேசிய விஜய், "சிங்கம் வேட்டைக்கு மட்டுமே வெளியில் வரும். வேடிக்கை பார்க்க சிங்கம் வெளியே வராது. காட்டில் பல விலங்குகள் இருக்கலாம். சிங்கம் கர்ஜித்தால் 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு அதிரும்.
மதுரை மண்ணில் வாழும் மக்கள் உணர்வுப்பூர்வமானவர்கள். சினிமாவிலும், அரசியலிலும் நமக்கு பிடித்தவர் எம்ஜிஆர். அவருடன் பழகுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அவரைப் போலவே குணம் கொண்ட என்னுடைய அண்ணன் விஜயகாந்துடன் பழகுவதற்கு எனக்கு நிறைய வாய்ப்பு கிடைத்தது. அவரும் இந்த மதுரை மண்ணைச் சேர்ந்தவர்தான்.
எதிரிகள் சொல்லும் எதையும்
நான் அரசியலுக்கு வர மாட்டேன் என்று சொன்னார்கள், மாநாடு நடத்த மாட்டேன் என்றார்கள். இப்போ பாருங்க, நான் ஆட்சியை பிடிக்க மாட்டேன் என்கிறார்கள். தமிழக அரசியலையே மாற்றும் மாநாடு இது, நாங்கள் எதிரிகள் சொல்லும் எதையும் காதில் போட்டுக்கொள்ள மாட்டோம். எல்லா கூக்குரலையும் சிரிப்போடு கடந்து வந்துள்ளோம்.
பாசிச பாஜகவுடன் மறைமுக கூட்டுக்கு செல்ல நாம் என்ன ஊழல் கட்சியா? மோடியின் முரட்டுப் பிடிவாதத்தால் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. பொய் வாக்குறுதிகள் கொடுத்து திமுக எல்லோரையும் ஏமாற்றுகிறது.
ஆட்சியாளர்களுக்கு வேட்டு
யாராலும் தடுத்து நிறுத்த முடியாத குரல் இது. இந்த கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல. ஆட்சியாளர்களுக்கான வேட்டாகவும் மாறும். ஆட்சியை பிடித்துக் காட்டட்டுமா? 234 தொகுதிகளிலும் உங்கள் வீடுகளில் உள்ளவர்கள்தான் வேட்பாளர்களாக நிற்பார்கள். தமிழ்நாடு முழுக்க நானே வேட்பாளர் என நினைத்து மக்கள் வாக்களிக்க வேண்டும். உங்கள் விஜய்தான் இந்த கட்சியின் சின்னம்.
ஒவ்வொரு வீட்டுக் குழந்தைகளின் தாய்மாமன் நான்
தமிழ் மக்கள் யாவரும் என் ரத்த உறவுகள் அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரவில்லை. படைக்கலனுடன் வந்துள்ளேன். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் உள்ள குழந்தைகளின் தாய்மாமன் நான். தமிழக மக்கள் எனக்கு கடவுள் கொடுத்த வரம். மக்களை மதிக்கிறேன். மக்களை வழிபடுகிறேன். உங்களுக்காக உண்மையாக உழைக்க உங்கள் விஜய் வந்திருக்கிறேன். வாழ்நாள் முழுக்க மக்களுடன் இருப்பேன். நல்லது செய்ய மட்டுமே வந்திருக்கிறேன். மக்களுக்கு பணி செய்து கிடப்பதே என் கடன்." எனப் பேசியுள்ளார் விஜய்.












Click it and Unblock the Notifications