2021-ல் அதிமுக ஹாட்ரிக் வெற்றி பெற வியூகங்கள் வகுத்துவிட்டோம் -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
மதுரை: வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஹாட்ரிக் வெற்றி பெற்று சாதனை படைக்கும் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
அரசின் ஒவ்வொரு நடவடிக்கைகளுக்கும் உள்நோக்கம் கற்பிப்பதே ஸ்டாலினுக்கு வேலை என உதயகுமார் விமர்சித்தார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார்.

அதிமுக வியூகம்
தமிழகத்தில் இரண்டு முறை தொடர்ந்து வெற்றிபெற்று ஆட்சியை பிடித்த அதிமுக மூன்றாவது முறையாகவும் வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெறும் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதிமுக வெற்றிக்கான வியூகங்களை வகுத்து செயல்படத் தொடங்கிவிட்டதாக அவர் கூறியிருக்கிறார்.

எளிதாக கிடைக்கும்
இ-பாஸ் முறையால் பொதுமக்கள் அவதிப்படுவதாகவும் அது நீக்கப்படுமா என்றும் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், இ-பாஸ் முறை எளிதாக்கப்பட்டுள்ளதாகவும் பயணம் செல்ல விரும்புவோருக்கு சிரமமின்றி வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். அரசின் நடவடிக்கைகளை குறை சொல்வதே திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வேலை என்றும் அதைவிட்டால் அவருக்கு வேறு வேலையில்லை எனவும் விமர்சித்தார்.

எம்.ஜி.ஆர். சேவை
தமிழக மக்களுக்காக ஜெயலலிதா ஆற்றிய சேவையும், எம்.ஜி.ஆர்.ஆற்றிய சேவையும் 2021 தேர்தலுக்கு பிறகும் அதிமுக ஆட்சி மூலம் தொடரும் என்றும் இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம் எனவும் கூறியிருக்கிறார். தமிழகத்தில் வேறு எந்தக் கட்சியும் செய்யாத ஹாட்ரிக் சாதனையை அதிமுக வரும் தேர்தலில் செய்யும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலின்
தமிழக அரசு மக்கள் பணிகளை சிறப்புற செய்து வரும் நிலையில் அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஸ்டாலின் உள்நோக்கம் கற்பிப்பதாக கூறிய அமைச்சர் உதயகுமார், மீண்டும் அதிமுக ஆட்சியை தொடர வைக்க வேண்டும் என மக்கள் விரும்புவதாக தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications