அப்போ “கன்பார்மா”.. அமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்! “கம்மிங் சூன்” சொன்ன அமைச்சர் பி.மூர்த்தி
மதுரை: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் தமிழ்நாடு அமைச்சராக பதவியேற்பார் என்று தமிழ்நாடு வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்து இருக்கிறார்.
திமுக சார்பில் மாநிலம் முழுவதும் இளைஞரணியில் அதிகளவிலான தொண்டர்களை இணைக்கும் விதமாக ஒவ்வொரு வீட்டிலும் ஒருவரை சேர்க்க வேண்டும் என்ற இலக்கோடு இல்லம் தேடி இளைஞரணி இயக்கம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக மதுரை கிழக்கு சட்டபேரவை தொகுதியில் வீடு தேடி சென்ற திமுக இளைஞரணிக்கு ஆட்களை சேர்க்கும் பணிகளில் திமுகவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அமைச்சர் மூர்த்தி பேச்சு
இந்த தொகுதிக்கு உட்பட்ட திருப்பாலை பகுதியில் நடைபெற்ற இல்லம் தேடி இளைஞரணி நிகழ்ச்சியை தமிழ்நாடு வணிக வரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி என பல்வேறு நலத்திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்து இருக்கிறார்.

திமுக இளைஞரணி
மதுரையில் இருக்கும் தொகுதிகளில் இளைஞர்களை அதிகளவில் சேர்க்க வேண்டும். அதிகளவிலான இளைஞர்களை திமுகவில் சேர்க்கும் இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு மதுரை மாவட்ட திமுக சார்பாக ஒரு சவரன் தங்க மோதிரம் வழங்கப்படும். திமுக இளைஞரணி ஏற்கனவே மிகவும் வலுவாக இருக்கிறது.

உதயநிதி அமைச்சர் ஆவார்
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர்களை வழிநடத்தக்கூடிய தலைவராக உருவெடுத்து இருக்கிறார். விரைவில் அவர் அமைச்சராக பொறுப்பு ஏற்க உள்ளார். இளைஞரணி செயலாளர் அமைச்சராக இருப்பதால் இளைஞரணி மேலும் வலுப்பெற இருக்கிறது. உதயநிதி அமைச்சரானால் இளைஞரணி மேலும் ஆக்கமும் ஊக்கமும் அடையும். நாங்கள் அமைச்சர்கள் ஆவதற்கும் திமுக இளைஞரணிதான் அடித்தளமாக அமைந்தது." என்றார்.

உதயநிதி ஸ்டாலின்
சினிமா தயாரிப்பு, நடிப்பு என கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிரமாக செயல்பட்டு வந்த உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞரணி செயலாளராக பதவியேற்றதில் இருந்தே கட்சிப் பணிகளில் முழுமூச்சாக இறங்கி செயல்பட்டு வந்தார். 2021 சட்டசபைத் தேர்தல் பிரச்சாரங்களில் தமிழ்நாட்டின் மூளை முடுக்குகளுக்கெல்லாம் சென்று திமுகவுக்காக வாக்கு சேகரித்தார் உதயநிதி ஸ்டாலின்.

தேர்தல் பிரச்சாரம்
எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தை கையில் எடுத்து ஒற்றை செங்கல்லோடு அவர் ஆற்றிய பிரச்சாரங்கள் மக்களால் பெரிதும் கவரப்பட்டன. அதேபோல் தான் போட்டியிட்ட சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியிலும் களத்தில் இறங்கி வீடு வீடாக வாக்கு சேகரித்தார்.

முதல் முறை எம்.எல்.ஏ.
அதன் பயனாக திமுக தேர்தலில் வெற்றிபெற்று மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார். உதயநிதி ஸ்டாலினும் முதல் முறையாக எம்.எல்.ஏவாக தேர்வானார். அப்போதே அவருக்கு அமைச்சரவையில் பதவி கிடைக்கும் என பேசப்பட்டது. ஆனால், அவருக்கு இலாக்காக்கள் ஒதுக்கப்படவில்லை. அதே நேரம் திமுக ஆட்சியமைத்த சில மாதங்களிலேயே உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்த மாதம் பதவியேற்பா?
தமிழ்நாடு அமைச்சர்கள், திமுக மூத்த நிர்வாகிகள் வெளிப்படையாகவே பேசத் தொடங்கினர். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி பலரும் தங்கள் விருப்பத்தை தொடங்கினர். சில மாதங்களாக ஓய்ந்திருந்த இந்த பேச்சு தற்போது மீண்டும் எழத் தொடங்கி உள்ளது. டிசம்பர் மாதத்தில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டு உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆக்கப்படுவார் என்ற பேச்சு அடிபடுகிறது.












Click it and Unblock the Notifications