தமிழக அமைச்சரவையில் பட்டியலினத்தவர்களுக்கு டம்மி துறைகள்! சமூகநீதி பற்றி திமுக பேசலாமா? -L.முருகன்
மதுரை: தமிழக அமைச்சரவையில் பட்டியலினத்தவர்களுக்கு டம்மி இலாகாக்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதாகவும் சமூகநீதியை பற்றி பேச திமுகவுக்கு அருகதை கிடையாது எனவும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் பட்டியலின எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சரவையில் முக்கிய இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு பேசினார்.
மதுரை மாவட்டம் மேலூரில் நடைபெற்ற பிரதமர் மோடியின் 8 ஆண்டுகால சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறியுள்ளார்.

சமூக நீதி
திமுகவுக்கும் சமூகநீதிக்கும் துளியும் சம்பந்தமில்லை எனப் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், கர்நாடகாவில் முதலமைச்சருக்கு அடுத்த நிலையில் உள்ள பொதுப்பணித்துறைக்கு பட்டியலினத்தை சேர்ந்தவர் அமைச்சராக இருக்கிறார் என பெருமிதம் தெரிவித்தார். இதேபோல் பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில் நிதி அமைச்சராக பட்டியலினத்தை சேர்ந்தவர் இருக்கிறார் என்றும் தமிழகத்தில் மட்டும் தான் பட்டியலினத்தவர்களுக்கு அமைச்சரவையில் கடைசி இடம் கொடுக்கப்படுவதாக குற்றஞ்சாட்டினார்.

அமைச்சரவை
அண்டை மாநிலமான ஆந்திராவில் கூட பட்டியலினத்தை சேர்ந்தவருக்கு உள்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது என்றும் இங்கு மட்டும் தான் ஆதி திராவிடர் நலத்துறை, வேலைவாய்ப்புத் துறை, சுற்றுலா துறை என அமைச்சரவையில் கடைசி இடங்கள் பட்டியலினத்தவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது என வேதனைத் தெரிவித்தார். சமூக நீதியை பற்றி பேச முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தகுதி கிடையாது என்றும் வருவாய்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளை பட்டியலினத்தவர்களுக்கு அவர் ஏன் கொடுக்கவில்லை எனவும் எல்.முருகன் வினவினார்.

சம வாய்ப்புகள்
பாஜக ஆட்சியில் தான் அனைவருக்கும் சம வாய்ப்புகள் வழங்கப்படுவதாகவும் சமூக நீதியின் கதாநாயகன் பிரதமர் மோடி தான் எனவும் அவர் பெருமிதம் தெரிவித்தார். தமிழகம் ஆன்மிக பூமி எனக் கூறிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், திமுக கூறி வரும் திராவிட மாடல் பற்றி மக்களுக்கே புரியவில்லை எனத் தெரிவித்தார். திராவிட மாடல் என திமுகவினர் கூறிக்கொண்டாலும் அது தமிழகத்தில் எடுபடாது என அவர் பேசினார்.

எல்.முருகன் பேச்சு
மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு திமுக காங்கிரஸ் கூட்டணியால் பதில் அளிக்க முடியவில்லை எனப் பேசிய எல்.முருகன், ஸ்மார்ட் சிட்டி திட்டம், 11 புதிய மருத்துவக் கல்லூரிகள், மெட்ரோ ரயில் திட்டம், எய்ம்ஸ் கிளை என எண்ணற்ற நலத்திட்டங்களை தமிழகத்திற்கு வழங்கியவர் பிரதமர் மோடி என புகழாரம் சூடினார்.












Click it and Unblock the Notifications