ஆட்சியில் பங்கு.. விவகார வீடியோ! அட்மின் போட்ருப்பார்.. திருமா சொன்னதை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே!
மதுரை: அமெரிக்க பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகம் திரும்பிய சில நிமிடங்களில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என வீடியோ போட்டார் திருமாவளவன். சில நிமிடங்களில் அந்த வீடியோ அழிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து 11:30 மணியளவில் மீண்டும் அந்த வீடியோ பதிவிடப்பட்டு மீண்டும் டெலிட் செய்யப்பட்டது. இந்த நிலையில் அந்த வீடியோவை அட்மின் போட்டிருப்பார் எனக் கூறி இருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரான திருமாவளவன்..
கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியலில் ஏதாவது ஒரு பரபரப்பு சம்பவம் நடைபெற்றுக் கொண்டே தான் இருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்ற பின் சீனியர் ஜூனியர் பிரச்சனையில் திமுக சிக்கித் தவிப்பதாக கூறப்படுகிறது.

இது ஒரு புறம் இருக்க திமுக கூட்டணியிலும் சில அரசியல் பரபரப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் சிலர் திமுக கூட்டணிக்கு எதிராக பேசி வருவது பிரச்சினையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் அவ்வப்போது ஏதாவது பிரச்சனையை கிளப்பி வருவதாக குறிப்பிடுகின்றனர் அரசியல் நோக்கர்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மது ஒழிப்பு மாநாட்டுக்கு அதிமுகவுக்கு அழைப்பு விடுத்து பரபரப்பை கிளப்பினார். அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் இது தொடர்பாகத்தான் பேசியிருந்தன. திமுக கூட்டணியில் பிரச்சனை இருப்பதாகவும் இதன் காரணமாகவே அதிமுக கூட்டணியில் இணைய திருமாவளவன் தூது விடுவதாகவும் யூகங்கள் கிளம்பின.
இந்த நிலையில் அமெரிக்க பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை சென்னை திரும்பினார். அவர் வந்த சில நிமிடங்களிலேயே விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனின் எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்று பதிவிட்டது. அதில் ஆட்சியில் பங்கு வேண்டும் என பேசி இருந்தார். சில நிமிடங்களில் அந்த வீடியோ அழிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சுமார் 11:30 மணியளவில் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற கேப்சனோடு அந்த வீடியோ மீண்டும் வெளியிடப்பட்டது.
சிறிது நேரத்தில் அந்த வீடியோவும் டெலிட் செய்யப்பட்டது. அந்த வீடியோவில்,"எதிர்த்து பேசக் கூடாது, கல்வியில் உயர்ந்துவிடக் கூடாது, போராடக் கூடாது, உயர்ந்த தகுதிக்கு வர ஆசைப்படக் கூடாது, ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கக் கூடாது. தமிழகத்தில் முதல்முறையாக கூட்டணி ஆட்சி என்ற குரலை உயர்த்திய கட்சி. அமைச்சரவையில் பங்கு வேண்டும். இதற்கு முன்பு கூட்டணிக் கட்சிகளை இதனை கோரினார்களா என தெரியவில்லை. அதிகாரத்தில் பங்கு வேறு, தொகுதிப் பங்கு வேறு. 1999 ஆம் ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தேர்தலில் அடியெடுத்து வைத்த போது முதல் கோரிக்கை, ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பதே. கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம், எளிய மக்களுக்கும் அதிகாரம்" என பேசியிருந்தார்.
இந்த நிலையில் கூட்டணியில் உரிய பங்கு மரியாதை கிடைக்கவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இருப்பதாகவும், அதனை திமுக தலைவரான மு.க.ஸ்டாலினுக்கு உணர்த்தவே அந்த வீடியோவை அவர் போட்டு இருக்கிறார் என கூறப்பட்டது. இது தொடர்பாக அதிமுக உள்ளிட்ட பல கட்சிகளும் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றன.
இந்நிலையில் இந்த வீடியோ குறித்து திருமாவளவனே விளக்கம் அளித்து இருக்கிறார். இதுதொடர்பாக மதுரையில் அவசரம் அவசரமாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இந்த வீடியோவை எனது அட்மின் டெலிட் செய்திருப்பார். அவரிடம் கேட்டு விட்டு சொல்கிறேன்.. ஆட்சியில் பங்கு என்பதை முதலில் பேசியதே விசிக தான்" என்றார். ஆனால் செய்தியாளர்கள் விடாமல் யார் வீடியோவை போட்டது? டெலிட் செய்தது ஏன்? யாரும் டெலிட் செய்யச் சொல்லி அழுத்தம் கொடுத்தார்களா? என கேள்வி எழுப்பினர், எல்லாவற்றுக்கும் அட்மினிடம் கேட்டுச் சொல்கிறேன் என அவசர அவசரமாக கிளம்பிச் சென்றார் திருமா.












Click it and Unblock the Notifications