“நரேந்திர தாமோதர் தாஸ் மோடியே.. மக்களை ஏமாற்றியது போதும்" - மோடிக்கு அடுக்கடுக்காக விஜய் கேள்வி!
மதுரை: "என்னதான் நீங்க குட்டிக்கரணம் அடித்தாலும், தாமரை இலையில் தண்ணியே ஒட்டாது.. தமிழக மக்கள் எப்படி ஒட்டுவாங்க?" என பாஜகவை கடுமையாக தாக்கி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று மாநாட்டில் பேசியுள்ளார்.
சுமார் 4 மணியளவில் மதுரை பாரப்பத்தியில் நடைபெறும் மாநாட்டு மேடைக்கு வந்த விஜய் கட்சி கொடியை ஏற்றினார். அதற்கு முன்பு மாநாட்டு மேடையில் அமைக்கப்பட்டிருந்த பாதையில், விஜய் நடந்து சென்றார். அதைத்தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றி தொடங்கினார்.

விஜய் பேசுகையில், "மக்கள் அரசியல் என்ற சவுக்கை கையில் எடுக்கலாமா? யாருக்கு எதிராக என்றுதானே கேக்குறீங்க? வேற யாரு? மறைமுக உறவுக்காரர்களான பாசிச பாஜகவும், பாய்சன் திமுகவும் தான். பிரதமர் நரேந்திர மோடிஜி அவர்களே.. மூன்றாவது முறையாக ஒன்றியத்தின் ஆட்சி அதிகாரத்தை நீங்கதானே கையில் வச்சிருக்கீங்க..
நீங்க ஆட்சிக்கு வந்தது ஒட்டுமொத்த மக்களுக்கும் நன்மை செய்யவா? இஸ்லாமியர்களுக்கு எதிராக சதி செய்யவா? மக்களுக்கு உங்களிடம் கேட்க ஏராளமான கேள்விகள் இருக்கு. அவர்கள் சார்பாக மோடிக்கு கேள்விகளை கேட்க வந்துள்ளேன். தமிழ்நாட்டு மீனவர்கள் கிட்டத்தட்ட 800 பேர் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு, சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். கச்சத்தீவை மீட்டுக் கொடுத்துவிடுங்கள்.. அது போதும்.
உங்கள் முரட்டுப் பிடிவாதத்தால் நீங்கள் நடத்தும் நீட் தேர்வால் என்னென்ன்ன நடக்கிறது. அதனை ரத்து செய்து விடுங்கள்.. நரேந்திர தாமோதர் தாஸ் மோடியே - மக்களை ஏமாற்றியது போதும். மக்கள் சக்திகளே இல்லாத ஊழல் கட்சிகளை அடிமைப்படுத்தி 2029 வரை சொகுசுப் பயணம் போய்விடலாம் என திட்டம் போட்டு வைத்திருக்கிறீர்கள். இதுதான் நீங்கள் நடத்தும் ஆட்சியா?
என்னதான் நீங்க குட்டிக்கரணம் அடித்தாலும், தாமரை இலையில் தண்ணியே ஒட்டாது.. தமிழக மக்கள் எப்படி ஒட்டுவாங்க? ஒரு எம்.பி சீட் கூட தரவில்லை என்பதற்காக தமிழ்நாட்டுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் எதுவுமே செய்யாமல் ஓரவஞ்சனை செய்கிறது பாஜக அரசு." எனப் பேசியுள்ளார் விஜய்.












Click it and Unblock the Notifications