விஜயகாந்த் என் அண்ணன்.. எம்ஜிஆரையும் உள்ளே இழுத்து மதுரை மாநாட்டில் உணர்ச்சி பொங்க பேசிய விஜய்!
மதுரை: ‛‛புரட்சி தலைவர் எம்ஜிஆரோடு பழகுறதுக்கு எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அவரை போலவே குணம் கொண்ட என்னோட அண்ணன் புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் உடன் பழகுவதற்கு நிறையவே வாய்ப்பு கிடைத்தது. அவரும் இந்த மதுரையை மண்ணை சேர்ந்தவர் தானே. அவரை மறக்க முடியுமா'' என உணர்ச்சி மிகுதியாக நடிகர் விஜய் மதுரை மாநாட்டில் பேசினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு மதுரையில் இன்று நடந்தது. மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமான தொண்டர்கள் மாநாட்டில் பங்கேற்றனர்.
மதுரை மாநாட்டில் நடிகர் விஜய் மதுரையின் பெருமை பற்றி பேசினார். அப்போது மறைந்த நடிகரும், தேமுதிக பொதுச்செயலாளருமான விஜயகாந்தை நினைவுப்படுத்தி பேசினார்.

இதுதொடர்பாக நடிகர் விஜய் பேசியதாவது: மதுரை என்றால் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுதான். நம்ம வைகை ஆறுதான். அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம். மதுரை மீனாட்சி அம்மன். இந்த மண்ணின் உண்மையான குணம் இது உணர்வுப்பூர்வமான மண் இது. அதுமட்டும் இல்லை இந்த மண்ணில் வாழும் மக்களும் அப்படித்தான். உணர்வுப்பூர்வமானவர்கள்.
நான் இந்த மண்ணில் கால் எடுத்து வைத்தவுடன் ஒருவரை பற்றி தான் என் மனசுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.அது யார் என்று உங்களுக்கும் தெரிந்து இருக்கும். சினிமா என்றாலும் சரி, அரசியல் என்றாலும் சரி.. நமக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது புரட்சி தலைவர் எம்ஜிஆர் தான். அவரோடு பழகுறதுக்கு எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஆனால் அவரை போலவே குணம் கொண்ட என்னோட அண்ணன் புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் உடன் பழகுவதற்கு நிறையவே வாய்ப்பு கிடைத்தது. அவரும் இந்த மதுரையை மண்ணை சேர்ந்தவர் தானே. அவரை மறக்க முடியுமா. தமிழ்நாட்டு மக்கள் உணர்வுப்பூர்வமாக உண்மையாகவே நம் பக்கத்தில் நிற்கிறார்கள்.
அதுக்கு மிகப்பெரிய அடையாளம் தான் இந்த மதுரை மண். நம் தமிழக வெற்றிக்கழகம் எடுத்துள்ள அரசியலும் அப்படித்தான். உண்மையான அரசியல், உணர்வுப்பூர்வமான அரசியல்.. நல்ல அரசியல்.. நல்ல மக்களுக்கான அரசியல்.. நாட்டு மக்களுக்கான அரசியல். இதோ நமது 2வது மாநில மாநாடு வாகை சூடும்'' என்றார்.












Click it and Unblock the Notifications