வக்பு வாரிய திருத்தச் சட்டம்: பிளவுவாத அரசியலுக்கு உதாரணம்.. மதுரை மாநாட்டில் பினராயி விஜயன் அட்டாக்
மதுரை: பிளவுவாத அரசியலுக்கு உதாரணமாக வக்பு வாரிய திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது என மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாட்டில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு மதுரையில் கடந்த 2 ஆம் தேதி தொடங்கியது. மாநாட்டின் நிறைவு நாளான நேற்று வண்டியூர் ரிங் ரோடு சுங்கச்சாவடி அருகில் உள்ள என் சங்கரய்யா நினைவுத்திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு மாநில செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-

தமிழ்நாடு மாபெரும் போராட்டங்களை நடத்திய மண். இங்கே தான் பெரியார், அறிஞர் அண்ணா, கருணாநிதி, பி ராமமூர்த்தி, உமாநாத், சங்கரய்யா போன்ற தலைவர்கள் வாழ்ந்தனர். தற்போது கூட்டாட்சியை உறுதிப்படுத்துவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். தற்போது நம் நாடு துரதிர்ஷ்டவசமான நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
மக்களை பிளவு படுத்துவது, நாடுகளுக்கு இடையே பிளவை ஏற்படுத்தும் நிலை நடக்கிறது. இதற்கு தீர்வு காணவேண்டிய பொறுப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கையில் உள்ளது. தேசிய அளவில் நம்மையெல்லாம் கவலை கொள்ளச்செய்யும் நடவடிக்கை நடந்து வருகிறது. மக்கள் மீது ஏராளமான வரிகள் திணிக்கப்பட்டு வருகிறது. முதலாளித்துவத்துடன் மத்திய அரசாங்கம் கள்ளக்கூட்டணி வைத்துக்கொண்டு மக்களை வதைக்கிறது.
வகுப்புவாத சக்திகளுக்கு எதிரானவர்கள் ஒன்று சேர்ந்து போராடும் நிலை உள்ளது. வக்பு வாரிய திருத்தச் சட்டம் மூலமாக பிளவுவாத அரசியலை மேற்கொண்டு வருகின்றனர். ஒருபகுதி மக்களை தனிமைப்படுத்தி அவர்களின் மீது வெறுப்பை ஏற்படுத்தி அவர்களை தாக்குதலுக்கு ஆளாக்கி வருகின்றனர்.
சிறுபான்மை மக்கள் மீது வெறுப்புணர்வை இந்த அரசாங்கம் ஏற்படுத்தி வருகிறது. முஸ்லிம், கிறிஸ்தவர்கள் மீது இப்படிப்பட்ட தாக்குதல் நடத்துவதற்கு காரணம், இவர்கள் ஒன்றிணைந்து தங்களுக்கு எதிராக வந்துவிடக்கூடாது என்ற முனைப்பில் தொடர்ந்து சங்பரிவார் கூட்டம் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications