சசிகலா வருகையால் கெமிக்கல் ரியாக்சன்...சீப்பை மறைத்தால் கல்யாணம் நின்று விடுமா - டிடிவி தினகரன்
அதிமுகவை மீட்டெடுத்து சசிகலா தலைமையில் ஆட்சியமைப்போம் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். சீப்பை ஒளித்து வைத்து விட்டால் கல்யாணத்தை நிறுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
மதுரை: சீப்பை ஒளித்து வைத்து விட்டால் கல்யாணத்தை நிறுத்தி விட முடியாது என்று அமமுக தலைவர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். அதிமுகவை மீட்டெடுத்து சசிகலா தலைமையில் ஆட்சியமைப்போம் என்றும் கூறியுள்ளார். சசிகலாவின் அதிகாரத்தை நீக்குவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சிறையில் இருந்து விடுதலையான சசிகலா, தற்போது பெங்களூருவில் ஓய்வெடுத்து வருகிறார். அவர் வரும் 7ஆம் தேதி பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வரபபோவதாக கூறியுள்ள டிடிவி தினகரன், பிரம்மாண்ட வரவேற்பு தரப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், சசிகலா விடுதலையால் தமிழகத்தில் கெமிக்கல் ரியாக்ஷன் ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.

கெட்டப்பெயர் ஏற்படக்கூடாது
சசிகலாவுக்கு தமிழக எல்லையில் இருந்து சென்னை வரை மக்கள் அலைகடலென வரவேற்பு அளிக்க உள்ளனர். சசிகலாவுக்கு அளிக்கும் வரவேற்பால் யாருக்கும் கெட்டபெயர் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

டிடிவி தினகரன் கிண்டல்
ஜெயலலிதாவின் நினைவிடம் மூடப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த தினகரன், சீப்பை ஒளித்து வைத்து விட்டால் கல்யாணத்தை நிறுத்தி விட முடியாது என்று சொன்னார். ஜெயலலிதா நினைவிடம் திறந்த பின்னர் அஞ்சலி செலுத்துவோம் என்றும் கூறினார்.

சசிகலா தலைமையில் ஆட்சி
திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதான் எங்கள் நோக்கம். அதிமுகவை மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காகவே அமமுக தொடங்கப்பட்டது. அதிமுகவை மீட்போம், சசிகலா தலைமையில் ஆட்சியமைப்போம். உண்மையான தொண்டர்கள் சசிகலாவின் பக்கம் இருக்கிறார் என்றும் டிடிவி தினகரன் கூறினார்.

பொதுச்செயலாளர்
தொடர்ந்து பேசிய தினகரன் சசிகலாதான் அதிமுக பொதுச்செயலாளர். அவர் சிறைக்கு சென்ற போது என்னை துணைப் பொதுச்செயலாளராக நியமித்தார். இவர்களாக கூட்டம் நடத்தி பொதுச்செயலாளர் பதவியை நீக்கினால் செல்லுபடியாகுமா,? அதற்கான சட்டப்போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம் என்றும் கூறினார்.

காத்திருந்து பாருங்கள்
அதிமுகவின் பொதுச்செயலாளரை, அவரது அதிகாரத்தை நீக்குவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. உண்மையாக தூங்குபவர்களை எழுப்பலாம். தூங்குவது போல நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்று கூறிய தினகரன், சசிகலா வருகையால் தமிழகத்தில் கெமிக்கல் ரியாக்சன் ஏற்பட்டுள்ளது. என்ன நடக்கிறது என்பதை காத்திருந்து பாருங்கள் என்றும் கூறியுள்ளார் டிடிவி தினகரன்.












Click it and Unblock the Notifications