"சட்டமன்றத்தில் நானும் இருந்தேன்.." 1989-ல் ஜெயலலிதாவுக்கு நடந்தது என்ன? எடப்பாடி பழனிசாமி
மதுரை: 1989-ல் நானும் சட்டப்பேரவையில் இருந்தேன் என்பதால் இதை கூறுகிறேன் என்றும் எதிர்க்கட்சி தலைவர் என்றும் ஒரு பெண் என்றும் பாராமல் ஜெயலலிதாவின் மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
மதுரையில் அதிமுக சார்பில் பிரமாண்ட்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அப்பணிகளை நேரில் பார்வையிட்டார். பின்னர் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மதுரையில் மாநாடு நடைபெறும் இடத்தை பார்வையிட்டேன். ரொம்ம நாட்களாக சிந்தித்து சிந்தித்து இப்போ தான் கூறியிருக்கிறார்..

அது 1989ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவம்.. இப்போது தான் நம்முடைய முதல்வர், பொம்மை முதல்வர் ஞாபகம் வந்து வெளிப்படுத்தியிருக்கிறார் என்று தான் மக்கள் பார்க்கிறார்கள். ஊடக செய்தி, பத்திரிக்கை செய்தி பார்த்தாவது முதல்வர் பேசியிருந்தால், முன்பே தெரிந்துகொண்டு பேசியிருந்தால்.. நாட்டு மக்களே அவரை முதல்வர் என சொல்லியிருப்பார்கள்.. இப்போது அவரே தன்னை பொம்மை முதல்வர் என்று ஒத்துகொண்டுள்ளார்.
நானும் இருந்தேன்: நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது எம்.பி கனிமொழி அவர்கள் சில கருத்துக்களை சொன்னார். துரியோனன் சபையில், திரவுபதி துச்சாதனன் துகிலுரித்த சம்பவத்தை மேற்கோள் காட்டி நாடாளுமன்றத்திலே கருத்துகளை பேசினார். அதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் 1989-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபையில் நடந்த நிகழ்வுகளை குறிப்பிட்டு பேசினார். அன்றைய தினம் தமிழ்நாடு சட்டசபையில் ஜெயலலிதா அவர்கள் எதிர்க்கட்சி தலைவராக இருந்தார்.
அப்போது நானும் சட்டமன்ற உறுப்பினராக அவரோடு பணியாற்றக்கூடிய வாய்ப்புக் கிடைக்கப்பெற்றேன். அம்மாவின் அருளாசியோடு எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக ஆனேன். நான் அந்த சபையில் தான் இருந்தேன். அந்த அவையிலே கொடூரமான முறையில், சட்டம் இயற்றும் அவையில் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி முன்பே இந்த கொடூர நிகழ்வு நடந்தது.
கருணாநிதி முன்னிலையில் நடந்தது: பெண் என்றும் பாராமல், எதிர்க்கட்சி தலைவர் என்றும் பாராமல் ஜெயலலிதா மீது கொடூர தாக்குதல் நடந்தது. திட்டமிட்டே அன்றைய முதல்வர் கருணாநிதி சில கருத்துக்களை பேசும்போது தான் இந்த பிரச்சினை ஏற்பட்டது. இது எல்லாம் பத்திரிக்கையில் விளக்கமாக வந்திருக்கிறது. அதை எதிர்த்து ஜெயலலிதா பேசும்போது தான் இந்த கொடூர நிகழ்வு நடைபெற்றது. இந்த கொடூரமான தாக்குதல் அன்றைய முதல்வர் கருணாநிதி முன்னிலையிலேயே தான் நடந்தது.
கருப்பு தினம்: திமுக அமைச்சர்கள், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கொடூரமாக தாக்கினர். அப்போது திருநாவுக்கரசர் அவர்களும், திரு கேகே எஸ் ஆர் அவர்களும் தான் தடுத்தனர். தடுத்துக்கொண்டிருக்கும்போதே இப்போது இருக்கும் மூத்த அமைச்சர் ஜெயலலிதாவின் சேலையை பிடித்து இழுக்க சில சட்டமன்ற உறுப்பினர்கள், அன்றைய அமைச்சர்கள் ஜெயலலிதாவின் தலைமுடியை பிடித்து இழுக்க என மிகப்பெரிய கோரமான காட்சி அன்றைய சட்டமன்றத்தில் அரங்கேறியது.
அன்றைய தினத்தை ஒரு கருப்பு தினமாக நாங்கள் பார்க்கிறோம். அன்றைய தினம் நான் சட்டமன்றத்தில் இருந்ததால் இதை இன்று கூறுகிறேன். அப்படிப்பட்ட கொடுமையான நிகழ்வு சட்டமன்ற வரலாற்றிலேயே நடந்தது இல்லை. சட்டமன்ற வரலாற்றிலேயே மிக மோசமான நாள் என்றால் 1989-ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி தான். இதுவரை சட்டமன்றத்தில் இப்படிப்பட்ட ஒரு சம்பவம் ஒரு பெண் சட்டமன்ற உறுப்பினருக்கு நடந்தது இல்லை.
சபைக்குறிப்பில் எப்படி ஏற்றுவார்கள்: ஆனால் இன்றைய முதல்வர் அதை கொச்சைப்படுத்தி பேசுகிறார். அதாவது 1989-ல் நடந்தது பற்றி இன்றைக்கு பேசுகிறார். எல்லாமே ஊடகத்தில் வந்திருக்கிறது. சட்டமன்றத்தில் என்ன நடந்தது என்று பத்திரிக்கையில் வந்தது. அடுத்த முறை சட்டமன்றத்துக்கு வந்தால் முதல்வராக தான் வருவேன் என்று சபதமிட்டு ஜெயலலிதா முதல்வராக சட்டமன்றத்துக்கு வந்தார். தமிழக மக்கள் திமுகவை தோற்கடித்தனர்.
சபைக்குறிப்பில் ஏற்றுவதற்கு அங்கு சட்டமன்றமா நடந்தது. அங்கு உண்மையான சட்டமன்றம் நடந்திருந்தால் இப்படி ஒரு சம்பவமே நடந்திருக்காது. அவர்களே சபைக்குறிப்பில் ஏற்றிக்கொள்கிறார்கள்.. அவர்களே இறக்கிக்கொள்கிறார்கள்... ஜெயலலிதா மீது இப்படி ஒரு செயலை செய்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. டிஸ்மிஸ் பண்ணியிருக்க வேண்டும். இன்று பாலியல் வன்கொடுமைக்கு எவ்வளவு சட்டம் இயற்றப்பட்டியிருக்கிறது.
கொடுமையான நிகழ்வு: ஒரு பெண் மீது நாட்டினுடைய முதல்வர் கண் எதிரே, சட்டத்தை பாதுகாக்க கூடிய ஒரு அரசாங்கம், பெண் என்றும் பாராமல், எதிர்க்கட்சி தலைவர் என்றும் பாராமல் சீலையை பிடித்து இழுக்கின்றபோது, முடியை பிடித்த இழுக்கின்ற போது அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? ஒரு நடவடிக்கையும் இல்லையே.. பத்திரிகை, ஊடகங்களில் கூட பெரிதாக போடவில்லையே.. எவ்வளவு பெரிய கொடுமையான நிகழ்வு.
தன் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றிருந்தால் எப்படி இருக்கும்.. தன் குடும்பத்தில், தாய்க்கோ, சகோதரிக்கோ இப்படிப்பட்ட நிகழ்வு ஏற்பட்டிருந்தால் நம் மனம் எப்படி வேதனைப்படும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். அப்படிப்பட்ட வேதனையுடன் தான் மக்களின் ஆதரவுடன் சட்டமன்றத்துக்கு முதல்வராக ஜெயலலிதா வந்தார்.












Click it and Unblock the Notifications