தலைக்கணம் பிடித்த அமைச்சர்னு விமர்சனம்! நள்ளிரவே மாறிய "கிளைமேட்"! சரவணனின் திடீர் மாற்றம் ஏன்?
மதுரை: மதுரையில் மதியம் கடுமையாக விமர்சனத்தை முன்வைத்த மதுரை பாஜக சரவணன் திடீரென நள்ளிரவில் மன்னிப்பு கோரியது ஏன்? சில மணி நேரங்களில் நடந்தது என்ன?
Recommended Video
இதுகுறித்து மதுரை சரவணன் நேற்று மதியம் செய்தியாளர்களை சந்தித்தபோது எங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என கேட்கிறார் அமைச்சர் பிடிஆர். முதலில் மதுரையில் இவருக்கு என்ன செல்வாக்கு இருக்கிறது. திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
தலைக்கணம் பிடித்த அமைச்சர் இவர். நான் இவருக்கு சவால் விடுகிறேன். அமைச்சர் பிடிஆர், இன்றே எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யட்டும். மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடட்டும். நானும் எனது தலைவர் அண்ணாமலையிடம் அனுமதி பெற்று பிடிஆரை எதிர்த்து போட்டியிடுகிறேன்.

யார் வெற்றி
யார்வெற்றி பெறுவார்கள் என்பதை பார்ப்போம். இதை நான் சவாலாகவே விடுகிறேன். தனது செயலுக்கு பிடிஆர் பழனிவேல் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் எங்கு சென்றாலும் பாஜக எதிர்ப்பை அறவழியில் பதிவு செய்வோம் என சரவணன் கொந்தளிப்பாக பேசியிருந்தார்.

மன்னிப்பு கேட்கணும்
இப்படி கொந்தளிப்பாக பிடிஆர் மன்னிப்பு கேட்கவேண்டும் என கூறிய சரவணன், திடீரென அமைச்சர் பிடிஆரை நள்ளிரவில் நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிடிஆரை சந்தித்த பிறகு சரவணன் செய்தியாளர்களிடம் கூறுகையில் ராணுவ வீரருக்கு அஞ்சலி செலுத்த பாஜகவுக்கு என்ன தகுதி இருக்கு என அமைச்சர் கேட்டார.

தனிமனித தாக்குதல்
இதை நான் உள்பட பாஜக நிர்வாகிகள் அனைவருமே தனிமனித தாக்குதலாகவே நினைத்தோம். பின்னர் நானும் தலைவர் அண்ணாமலையும் ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் போது சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்தன. இதையடுத்து நான் வீட்டுக்கு போய் யோசித்தேன். அந்த விரும்பத்தகாத நிகழ்வு என் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது.

புரோட்டோகால்
அப்போது யோசித்த போதுதான் தகுதி என்ன இருக்கு என அமைச்சர் கேட்டது, புரோட்டோகாலை பற்றி என புரிந்தது. அவர் வெளிநாட்டில் படித்தவர், அவரது தமிழ் அப்படிதான் இருக்கும். நான்தான் தவறாக புரிந்து கொண்டேன். அதனால் அண்ணனை (பிடிஆர்) சந்தித்து மன்னிப்பு கேட்டேன் என்றார்.

பாஜகவில் தொடரமாட்டேன்
மேலும் தான் பாஜகவில் தொடர போவதில்லை என்றும் சரவணன் தெரிவித்துள்ளார். இவர் ஏற்கெனவே ஒரு முறை திமுகவுக்கு தாவ போகிறார் என்ற தகவல் கடந்த ஜூன் மாதம் வெளியானது. திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினை சந்தித்து திமுகவில் ஐக்கியமாகிறார் என்றார்கள். ஆனால் நடுவில் என்ன நிகழ்ந்ததோ தெரியவில்லை. இந்த சம்பவத்தை சரவணன் மறுத்தார்.

பதவி பறிக்கப்படும்
தற்போது இந்த பிடிஆர் கார் மீதான காலணி சம்பவம் இந்திய அளவில் டிரென்டானது. இதனால் தமிழக பாஜக மட்டுமல்லாமல் தேசிய அளவிலும் பாஜக மத்தியில் சரவணனுக்கு எதிராக அதிருப்தி நிலவியது தெரிகிறது. மேலும் மாநில தலைவர் அண்ணாமலையும், அமைச்சர் கார் மீது காலணி வீசிய விவகாரம் பெரிதானதும் அந்த சம்பவம் தவறுதான். அந்த தவறை யார் செய்திருந்தாலும் அவர்களது பதவி பறிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

புதிய பதவிக்கு
இதுகுறித்து சரவணனுக்கு நெருங்கிய மதுரை வட்டாரங்களில் விசாரித்த போது, சரவணன் மத்திய வாரியங்களில் முக்கிய பதவியை கேட்டு வந்ததாகவும் அதற்கு பாஜகவின் இன்னொரு பிரமுகர் முட்டுக்கட்டை போட்டதாகவும் இதனால் சரவணனுக்கு புதிய பதவியை வழங்க முடியாத நிலை அண்ணாமலைக்கு ஏற்பட்டது. இதனால அதிருப்திக்குள்ளாகியிருந்த சரவணன் கடந்த சில மாதங்களாக திமுகவுக்கு செல்ல சமயம் பார்த்து காத்திருந்தார். தற்போது செருப்பு வீச்சு விஷயத்தை வைத்து பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்தார். என தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications