மதுரையில் வளர்ப்பு பூனைக்கடிக்கு சிகிச்சை! வலி தாங்க முடியாமல் மருத்துவமனையில் இளைஞர் விபரீதம்
மதுரை: மதுரையில் பூனைக்கடிக்கு சிகிச்சை பெற்று வந்த இளைஞர் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனி வார்டில் வைத்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை கொடுத்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

மதுரை மாநகர் அவனியாபுரத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் (25). இவர் வீட்டில் பூனை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு இவருடைய வளர்ப்பு பூனையே கடித்துவிட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் பூனைக் கடித்ததை பாலமுருகன் கண்டு கொள்ளாமல் விட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் நாளடைவில் பாலமுருகனுக்கு பூனை கடித்த இடத்தில் மிகப் பெரிய புண் ஏற்பட்டு, அது வலியை கொடுத்ததாம்.
இதையடுத்து பாலமுருகன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றார். அங்கு அவரை சோதித்த மருத்துவர், அந்த புண்ணின் தீவிரத்தை உணர்ந்து அவரை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்குச் செல்லுமாறு அறிவுறுத்தினாராம்.
அங்கு பாலமுருகன் சென்றதும் அவர் ரேபிஸ் சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவர் மட்டுமே தனியாக அந்த வார்டில் சிகிச்சை பெற்று வந்ததால் மன உளைச்சல் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் அவர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றதாகவும் சொல்லப்படுகிறது.
அப்போது மருத்துவமனை செவிலியர்கள் அவரை பிடித்து சமாதானம் செய்து வார்டிற்கு அனுப்பி வைத்தனராம். இதையடுத்து தனி அறையில் சிகிச்சை அளிக்கவும் மருத்துவர்கள் உத்தரவிட்டனராம்.
இந்த நிலையில் புண்ணால் வலி தாங்க முடியாமல் பாலமுருகன் அவதிப்பட்டதாக தெரிகிறது. இதனால் கடும் மன உளைச்சல் ஏற்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பெற்று வந்த அறையிலேயே தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தற்கொலை எதற்கும் தீர்வு அல்ல... வாழ்வதற்கு புது நம்பிக்கையைப் பெற தமிழ்நாடு அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-ஐ தொடர்பு கொண்டு பேசலாம். சிநேகா தொண்டு நிறுவனத்தை தொலைபேசி மூலமாக +91 44 2464 0050 +91 44 2464 0060 இமெயில் மூலமாக [email protected] தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications