"இது வெறும் தொடக்கம் தான்.. வடமாநிலத்தவர் தாக்குதல் அதிகரிக்கும்.. திருப்பூர் சம்பவம்! சீமான் பரபர
திருப்பூரில் தமிழர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதுரை: மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருப்பூரில் தமிழர்களை வட இந்தியர்கள் தாக்கியதாகச் சொல்லப்படும் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
மதுரை அவனியாபுரத்தில் புலவர் தமிழ்கூத்தன் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. நாம் தமிழர் சார்பில் நடைபெற்ற இநத் கூட்டத்தில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் விரிவாகப் பேசினார், குறிப்பாகத் திருப்பூரில் தமிழர்களை வடமாநிலத்தவர் தாக்க முயன்றதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
தமிழர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்? நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பூரில் போராட்டம்! பதற்றம்
திருப்பூர்
கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் தமிழக இளைஞர்களை ஓட ஓட விரட்டுவது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாகப் பரவி வந்தது. இது எங்கோ எடுத்தது இல்லை.. நம்ம திருப்பூரில் நடந்த சம்பவம் தான் இது. அங்கிருந்த தமிழக இளைஞர்களைப் பல நூறு வடமாநிலத்தவர் இணைந்து ஓட ஓட விரட்டிய சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகப் புயலைக் கிளப்பியது
சீமான்
இந்த நிகழ்ச்சியில் பேசிய சீமான், "நமது குல தெய்வம் வேலு நாச்சியாருக்கு இங்கு எந்தவொரு அடையாளமும் இப்போது வரை இல்லை. வேலு நாச்சியாரின் பேரன் நான் வந்தால் அவருக்கு மிகப் பெரிய கோயிலைக் கட்டி தமிழில் குடமுழுக்கு நடத்துவேன். இங்கு யார் யாருக்கோ எப்படியோ சிலை வைத்துள்ளனர். ஆனால், வேலு நாச்சியாருக்கு மரபாச்சி பொம்மை போல ஒரு சிலையை வைத்துள்ளார்கள். நான் வந்தால், மற்றவர்களுக்கு இருக்கும் சிலையை ஒரே இரவில் தூக்கி நடுக்கடலில் வீசிவிடுவேன். அப்போது யாரெல்லாம் போராட்டம் நடத்துகிறார்கள் என்பதைப் பாருங்கள்.
வடமாநிலத்தவர்
இப்போது திருப்பூரில் என்ன நடந்துள்ளது என்பதைப் பாருங்கள்.. திருப்பூரில் வட மாநிலத்தவர் தமிழர்களைத் தாக்கியுள்ளனர். இப்படியெல்லாம் நடக்கும் என்று நான் முன்பே சொன்னேன். இது வெறும் தொடக்கம் தான். இதன் பிறகு அனைத்து இடங்களிலும் அவர்கள் இதுபோலத் தான் தாக்கி விரட்டுவார்கள். அப்போது தான் நீங்கள் சீமானை தேடுவீர்கள். இங்கு அவர்களை ஆதரிக்கத் தனியாக ஒரு கூட்டம் இருக்கிறது. இந்தியைக் கட்டாயம் படிக்க வேண்டும் என்றார்களே அதே கூட்டம் தான்.
தற்காப்பு மனநிலை தேவை
இங்கு ஏற்கனவே ஏகப்பட்ட வடமாநிலத்தவர் உள்ளனர். அவர்கள் அனைவரும் பாஜக வாக்காளர்கள் தான். இது புதிது அல்ல. முன்பும் நடந்துள்ளது. இனியும் நடக்கும் ஆபத்து உள்ளது. வந்தவர்களை வாழ வைக்க வேண்டும் என்ற தமிழர்களின் அறமே இதற்குக் காரணம். இப்போது தான் நம்மை நாம் முதலில் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற அறம் வந்துள்ளது. திருப்பூர் சம்பவத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக நாம் விழித்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் நம்மை வீழ்த்திவிடுவார்கள்.
சாதிவாரியான கணக்கெடுப்பு
இங்கு உடனடியாக சாதிவாரியான கணக்கெடுப்பு எடுக்க வேண்டும். தாழ்த்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர் என்று அரசே எப்படி அறிவிக்க முடியும். அவர்களிடம் இருந்து வரி வசூலிக்காமல் இருக்கிறார்களா என்ன! இது என்ன சமூக நீதி.. முக்குலத்தோருக்கு மூன்று அமைச்சர் பதவி கொடுத்துள்ளனர். கோனார் சமூகத்தினருக்கு இரண்டு அமைச்சர் பதவி கொடுத்துள்ளனர். ஆனால், உங்கள் வீட்டிலேயே இரண்டு அமைச்சர்களை வைத்துக் கொண்டுள்ளீர்கள். சமூகத்திற்கு ஏற்ப அமைச்சரவையில் பதவி தர வேண்டும்.
அதிமுக விவகாரம்
இப்போது அதிமுக என்று ஒரு கட்சியே இல்லை.. அவர்கள் ஒன்றாக இருந்த போதும் என்ன நடந்தது.. நாங்கள் தான் அனைத்து கட்சிகளுக்கும் மாற்று. அதிமுக இரு பிரிவுகளாக இருப்பதால் பாஜக வளர்வதாகச் சொல்லுகிறார்கள். பாஜக வளராது. அப்படி வளர்ந்தது என்றால் எங்களைப் போலத் தனித்து நிற்குமா. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தனித்து அவர்களால் நிற்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.