செங்கோட்டையனால் அதிமுகவில் சிக்கல்? வந்து விழுந்த கேள்வி! 2 நொடி யோசித்து செல்லூர் ராஜு சொன்ன பதில்
மதுரை: அதிமுக சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இல்லை எனச் சொல்லி அந்த நிகழ்ச்சியை அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் புறக்கணித்ததிருந்தார். அது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், அதிமுகவின் செல்லூர் ராஜு இது குறித்து விளக்கமளித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக நிகழ்ச்சியில் எம்ஜிஆர், ஜெயலலிதா போட்டோக்கள் இல்லை என முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவர் செங்கோட்டையன் நிகழ்ச்சியைப் புறக்கணித்தது சர்ச்சையானது.

செல்லூர் ராஜு:
இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சரும் மூத்த அதிமுக தலைவருமான செல்லூர் ராஜு சில முக்கிய விளக்கங்களை அளித்துள்ளார். செங்கோட்டையன் எந்தவொரு இடத்திலும் எடப்பாடி பழனிசாமியை குற்றஞ்சாட்டவில்லை என்றும் சம்பந்தப்பட்ட அமைப்பாளர்களை மட்டுமே விமர்சித்திருப்பதாகத் தெரிவித்தார்.
மதுரையில் மாமன்னர் திருமலை நாயக்கரின் 442வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதற்காக மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் உள்ள அவரின் சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர். செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜுவிடம் செங்கோட்டையன் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "அதிமுகவில் சிறிய விஷயம் நடந்தாலும் கூட அதைப் பூதாகரமாக்கி விமர்சிக்கிறார்கள்.
அதிமுகவில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை:
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அதிமுகவில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை. குறிப்பிட்ட அந்தவொரு நிகழ்ச்சியில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இல்லை என்று செங்கோட்டையன் அமைப்பாளரிடம் மட்டுமே கூறியிருக்கிறார்.
இப்போது முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றும் நிகழ்ச்சிகளுக்கு அவர்கள் கஷ்டப்பட்டு மக்களை அழைத்து போகிறார்கள். ஆனால், அதிமுக நிகழ்ச்சிகளுக்கு மக்கள் தானாகவே வருகிறார்கள். 100 ஆண்டுகளாகக் கிடப்பில் இருந்த அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார். அதை எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது முடித்து வைத்துள்ளார். எடப்பாடி 4 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்தாலும் மக்கள் மனதில் நிற்கும் அளவுக்கு அவரது ஆட்சி இருந்தது.
செங்கோட்டையன்:
செங்கோட்டையன் விவகாரத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நற்பெயரைக் களங்கப்படுத்தத் திட்டமிட்டு திமுக செயல்பட்டு இருக்கிறது. செங்கோட்டையன் பேசியதைக் கேட்டீர்கள் என்றால்.. அவர் எந்தவொரு இடத்திலும் அதிமுக கட்சியையோ, பொதுச் செயலாளரையோ குறை சொல்லவில்லை. சம்பந்தப்பட்ட அமைப்பாளரை மட்டுமே குற்றஞ்சாட்டியுள்ளார். அதேநேரம் தனது கருத்தால் கட்சிக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்பதையும் அவரே சொல்லிவிட்டார். இதனால், அது குறித்து மேலும் பேசத் தேவையில்லை" என்றார்.
என்ன நடந்தது:
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் தொடர்பாகச் சமீபத்தில் எடப்பாடி பழனிசாமிக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் கோபி எம்எல்ஏவுமான செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படம் இல்லாததாலேயே அந்த விழாவை செங்கோட்டையன் புறக்கணித்திருந்தார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "நாங்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்டு, வளர்த்தெடுக்கப்பட்டவர்கள். அப்படி எங்களை வளர்த்து ஆளாக்கிய தலைவர்களின் படங்களே அந்த விழாவில் இல்லை. இதன் காரணமாகவே அந்த நிகழ்ச்சிக்கு நான் செல்லவில்லை" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications