வேங்கைவயல் வழக்கு.. சிபிஐக்கு மாற்றுவதால் என்ன ஆகப்போகிறது? நீதிபதிகள் கேட்ட கேள்வி!
வேங்கைவயல் வழக்கை சிபிஐ-க்கு மாற்றுவதால் என்ன ஆகப்போகிறது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மதுரை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீரில் மலம் கலந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றுவதால் என்ன ஆகப் போகிறது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். தமிழ்நாடு காவல்துறையில் போதிய அதிகாரிகள் உள்ளதாக கூறிய நீதிபதிகள், கல்வியால் மட்டுமே இதுபோன்ற சம்பவங்களை தடுக்க முடியும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மர்ம ஆசாமிகள் அசுத்தம் கலந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 100-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

சிபிஐ-க்கு மாற்றக்கோரி வழக்கு
இந்த நிலையில் குடிநீரில் மலம் கலந்தது தொடர்பான வழக்கினை சிபிஐ-க்கு மாற்ற கோரி புதுக்கோட்டை ஆலங்குடியை சேர்ந்த திருமுருகன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

சிபிஐ-க்கு மாற்றி என்ன ஆகப்போகிறது?
அப்போது மனுதாரர் தரப்பில், இந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. இன்னும் யாரையும் கைது செய்யவில்லை. எனவே வழக்கை சிபிஐக்கு மாற்றி விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் வழக்கை சிபிஐ-க்கு மாற்றி என்ன ஆகப்போகிறது? என்று கேள்வி எழுப்பினார்கள். அதுமட்டுமல்லாமல், சிபிஐ-க்கு வழக்கை மாற்றினால் அவர்கள் தங்களிடம் தேவையான மனிதவளம் இல்லை என்று தெரிவிப்பார்கள்.

இந்தியாவில் தொடர்கிறது
சிபிஐ-யை விட தமிழ்நாடு காவல்துறையில் போதிய அதிகாரிகள் இருக்கிறார்கள். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் சிபிஐ என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? அந்த வழக்கை விசாரித்த பல அதிகாரிகள் ஓய்வு பெற்று சென்று விட்டனர். இதுபோன்ற நிகழ்வுகள் நமது நாட்டில் தான் தொடர்ச்சியாக நடக்கிறது. எந்த விசாரணை அமைப்புகளுக்கு மாற்றினாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை.

கல்வியால் மட்டுமே மாற்றம்
மக்களும் இந்த சம்பவங்களை காலப்போக்கில் மறந்து விடுவார்கள். தமிழ்நாடு காவல்துறையிடம் தேவையான மனித வளம் உள்ளது. கல்வியால் ஏற்படும் விழிப்புணர்வால் மட்டும் தான், இதுபோன்ற சம்பவங்களை தடுக்க முடியும் என்று தெரிவித்தனர். தொடர்ந்து, வேங்கைவயல் வழக்கின் தற்போதைய நிலை அறிக்கை மற்றும் ஆவணங்களை தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை மார்ச் 30ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications