குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 எப்போது? தேர்தல் நாளில் அமைச்சர் மூர்த்தி சொன்ன முக்கிய தகவல்!
மதுரை: ‛‛குடும்பத் தலைவிகளுக்கான ரூ.1000 மாதாந்திர ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை இன்னும் ஓரிரு மாதங்களில் முதல்வர் செயல்படுத்துவார்'' என மதுரையில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் வணிகவரித்துறை அமைச்சராக இருப்பவர் மூர்த்தி. மதுரை கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். மதுரை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வந்தார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி இன்று மதுரை ஐயர்பங்களாவில் உள்ள சேவியர் மெட்ரிக் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தனது குடும்பத்துடன் வாக்களித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

படிப்படியாக நிறைவேற்றம்
மதுரை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் அனைத்தையும் திமுக கைப்பற்றும். சட்டசபை தேர்தலின்போது திமுக கூறிய வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. அதிமுகவை போல் மதுரையில் மோனோ ரயில் விடுவோம், தமிழன்னைக்கு சிலை வைப்போம், சிங்கப்பூருக்கு இணையாக மதுரையை மாற்றுவோம் என்று உண்மைக்குப் புறம்பான வாக்குறுதியை திமுக சொல்லவில்லை.

ரூ.1000 எப்போது
பெண்களுக்கான அடிப்படை மற்றும் பொருளாதார தேவைகளை நிறைவேற்ற முயற்சிக்கிறோம். இது பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. குடும்ப தலைவிகளுக்கான ரூ.1000 மாதாந்திர ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை இன்னும் ஓரிரு மாதங்களில் முதல்வர் செயல்படுத்துவார்.

100 சதவீத வெற்றி
அதிமுகவினர் எத்தனை பரிசுப் பணம் கொடுத்தாலும் வெற்றி பெற முடியாது. ஆர்வத்தோடு வாக்களிக்க வரும் மக்களை பார்க்கும்போது பிப்.,22ம் தேதி இதுவரை இல்லாத அளவுக்கு மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி அனைத்து வார்டுகளிலும் 100 சதவீதம் திமுக மாபெரும் வெற்றி பெறும்'' என்றார்.

விறுவிறுப்பு
மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை மதுரை மாநகராட்சி, உசிலம்பட்டி, திருமங்கலம், மேலூர் என 3 நகராட்சி, டி.கல்லுப்பட்டி, ஏ.வெள்ளாளபட்டி, சோழவந்தான், எழுமலை, பாலமேடு, பரவை, வாடிப்பட்டி, அலங்காநல்லூர், பேரையூர் என 9 பேரூராட்சிகள் உள்ளன. இந்த 13 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் நேற்று தேர்தல் நடைபெற்றது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஜனநாயக கடமையை ஆற்றியதால் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது.












Click it and Unblock the Notifications