தியேட்டரில் 100% ரசிகர்களுக்கு அனுமதி.. பள்ளிகளை திறக்கவில்லையே ஏன்? அமைச்சர் கொடுத்த செம விளக்கம்
மதுரை: தியேட்டரில் 100 சதவிகிதம் வருகை என்பது கட்டாயமில்லை, ஆனால் பள்ளிகளில் 100 சதவிகிதம் என்பது கட்டாயம் என்பதால் பள்ளிகளைத் திறக்க அரசு யோசித்து வருகின்றது என அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கூறினார்.
Recommended Video
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வாலாந்தூர் கிராமத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ2500 ரொக்க பணத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் வழங்கினார்.
அதனைதொடர்ந்து உசிலம்பட்டியில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் (டிஇஎல்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி) தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
உதயகுமார் பங்கேற்பு
இதில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்பி உதயக்குமார் கலந்து கொண்டு பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டியை வழங்கினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்பி உதயக்குமார் கூறியதை நீங்களே பாருங்கள்.
தியேட்டர்கள் திறப்பு
கொரோனா தாக்கம் காரணமாக சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது 100 சதவீதத்துடன் தியேட்டர்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தியேட்டர்களில் 100 சதவீதம் வருகை கட்டாயமில்லை. விரும்பியவர்கள் மட்டும் தியேட்டருக்கு வரலாம். தியேட்டர் உரிமையாளர்கள் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
100 சதவீதம்
மேலும் தியேட்டர்களில் 100 சதவீத வருகை கட்டாயமில்லை. ஆனால், பள்ளிக்கூடங்களில் மாணவ, மாணவிகளின் வருகைப் பதிவேடு 100 சதவீதம் கட்டாயம் என்கின்ற சூழ்நிலையால், பள்ளிகள் திறப்பது யோசிக்கப்பட்டு, பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதுதான் பள்ளிகள் திறப்பு பற்றி முடிவெடுக்க முடியாத காரணம். இதனால்தான் காலதாமதம் ஏற்படுகிறது.
பெற்றோர்களிடம் ஆலோசனை
இதனால் தான் மாணவர்களின் பெற்றோர்களிடம் தொடர்ந்து கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகிறது. கல்வித்துறை அமைச்சர், அதிகாரிகளுடன் முதல்வர் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.