லண்டனுக்கு அடுத்தப்படியாக நம்ம மதுரையில் மட்டுமே! கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் அப்படியென்ன சிறப்பு?
மதுரை: மதுரையின் மிக முக்கிய அடையாளமாக மாறப்போகும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை இன்று மாலை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ள நிலையில், லண்டனுக்கு அடுத்தப்படியாக அந்த நூலகத்தில் இடம்பெற்றுள்ள ஒரு சிறப்பு குறித்து இங்கே பார்க்கலாம்.
புது அடையாளம்: கலைஞர் நூற்றாண்டு நூலகம் மதுரை புது நத்தம் சாலையில் அமைந்திருக்கிறது. சென்னை கோட்டூர்புரம் என்றாலே அண்ணா நூலகம் எனும் அளவுக்கு அதன் முகமாக மாறியிருப்பதைப் போல இனி மதுரை புது நத்தம் என்றால் கலைஞர் நூலகம் என்றாகி விடும். 2:13 லட்சம் சதுர அடிப் பரப்பளவில், ரூ.114 கோடி மதிப்பீட்டில், அடித்தளம் தரைத்தளத்தோடு 6 தளங்களுடன் பிரம்மாண்டமாக நூலகம் கட்டப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் பதிப்பிக்கப்படும் அறிவியல் நூல்கள். நவீன வெளியீடுகள். வரலாற்று நூல்கள். மருத்துவ நூல்கள், தொழில்நுட்ப நூல்கள் என வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த 3.3 லட்சம் புத்தகங்கள் இந்நூலகத்துக்காகக் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

என்னென்ன பிரிவுகள்?: நூல்களை இரவல் வழங்குவதற்கும் பெற்றுக்கொள்வதற்குமான பிரிவு, சொந்த நூல்கள் வாசிப்பதற்கான பிரிவு, குழந்தைகள் பிரிவு, கலைஞர் பிரிவு, தமிழ் நூல்கள் பிரிவு, நாளிதழ், பருவ இதழ்கள், ஆராய்ச்சி இதழ்கள். ஆங்கில நூல்கள், போட்டித் தேர்வுகள், அரிய நூல்கள், பல்லூடகம், நூல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவும் அதன் பயன்பாட்டுக்கும் தேவைக்கும் உகந்த விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
லண்டனுக்கு அடுத்து: வரலாற்று ஆய்வாளர்களுக்கான மிகப் பெரும் சான்றாதாரக் களஞ்சியமாக இந்த நூலகத்திலுள்ள அரிய நூல்கள் பிரிவு இருக்கும். எடுத்துக்காட்டாக, 1918 இல் வெளிவந்த 'ஜஸ்டிஸ்' ஆங்கில இதழ்களும், திராவிட இயக்கத் தலைவர்கள் வெளியிட்ட 50க்கும் மேற்பட்ட இதழ்களும் இந்தப் பிரிவில் இடம்பெற்றுள்ளன. 1824ல் வெளிவந்த சதுரகராதி முதல் பதிப்பு, லண்டன் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தை அடுத்து மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் மட்டும்தான் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து தரப்பினர்: கலைஞர் நூற்றாண்டு நூலகமானது குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள். ஆராய்ச்சியாளர்கள். போட்டித் தேர்வுக்குத் தயாராகுபவர்கள். பெண்கள். மூத்த குடிமக்கள் என அனைத்துத் தரப்பினரும் பயன்படுத்தும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு துறை சார்ந்தும் வெளிவந்த தமிழ், ஆங்கில நூல்கள் அந்தந்தத் துறைகளில் சிறந்து விளங்கும் வல்லுநர்களைக் கொண்ட குழுக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
அறிவியல் கூடம்: மேலும், வாசிப்பதற்கும் ஆய்வுக்குமான தளமாக மட்டுமல்லாமல் வேறு பல அறிவுச் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் நிகழ்ச்சிகளுக்கான அரங்கம், சிறார்களுக்கான திரையரங்கம், சிறார் அறிவியல் கூடம், பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிநூல் ஸ்டுடியோ. கலைக்கூடம் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், கலை, பண்பாடு. அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த கற்றலுக்கான மையமாகவும் இது இயங்கும்.
ஃபுல் ஏசி வசதி: முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்நூலகத்தில் மின்னுருவாக்கப் பிரிவுகளும் உண்டு. அரிய நூல்கள். ஆவணங்கள், ஓலைச்சுவடிகள், கையெழுத்துப் பிரதிகளை மின்னுருவாக்கம்செய்து. மின்நூலகம் உருவாக்கி உலகமெங்கும் வாழும் தமிழர்களுக்கு எடுத்துச்செல்லப்படும். பார்வையற்றோருக்கான புத்தகங்கள் மட்டுமில்லாமல் அனைத்துப் புத்தகங்களையும் அவர்கள் வாசிக்கும்படி DAISY MP3, BRF, Audio format-களில் வழங்குவதற்கு முயற்சி எடுக்கப்பட்டுவருகிறது.
இதர சிறப்பம்சங்கள்: குழந்தைகளுக்கான கதைசொல்லல், அறிவியல் அறிதல், கலைகள், விளையாட்டு. யோகா. கைவினைச் செய்முறைகள் போன்ற தொடர் நிகழ்வுகளையும் விடுமுறை காலச் சிறப்பு நிகழ்ச்சிகளையும் மேற்கொள்ளத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மகளிருக்கான சுயதொழில் பயிற்சி வகுப்புகள், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சிகள், மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிகள், ஓலைச்சுவடிகள், பாறை ஓவியங்கள், அகழாய்வுகள் குறித்து ஆளுமைகளுடன் உரையாடல்கள் என வாசிப்புத் தேடலை அறிவுக் கொண்டாட்டமாக மாற்றும் முயற்சிகளும் இந்நூலகத்தில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். இவையெல்லாம் இந்த நூலகத்துடன் சுருங்கிவிடாமல் உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் பயன்பெறத்தக்க வகையில் இணையதளம் வாயிலாகவும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் எடுத்துச்செல்லப்படும்.












Click it and Unblock the Notifications