மாணவி ஷோபனாவை ஞாபகம் இருக்கா? 3 ஆண்டுகளுக்கு பிறகு ‘இன்ப அதிர்ச்சி’ கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!
மதுரை: 2021ல் உயர்கல்வி படிக்க உதவி கோரிய மாணவிக்கு உதவி செய்த முதல்வர் ஸ்டாலின், முன்பு மதுரை செல்லும்போது அந்த மாணவியைச் சந்தித்து கல்வி உதவிகளை வழங்கி இருந்தார். இந்நிலையில், அந்த மாணவி தற்போது படிப்பை முடித்துள்ள நிலையில், அவருக்கு வேலைவாய்ப்பும் வழங்கியதோடு, இன்று நேரில் சந்தித்து வாழ்த்தி உள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
மதுரை மாவட்டம், திருவேடகம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணவி ஷோபனா. இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு தான் கல்லூரி சேர்ந்து படிப்பதற்கு பண வசதியில்லாமல் ஏழ்மை நிலையில் இருப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார். மாணவி ஷோபனாவின் கடிதத்தை பரிசீலித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவி ஷோபனாவிற்கு மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரியில் பி.பி.ஏ பட்டப்படிப்பு படிப்பதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்தார்.

அதன்படி, ஷோபனா அந்தக் கல்லூரியில் சேர்ந்து சிறப்பாக படித்து வந்தார். தனது படிப்புக்கு உதவிய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை சென்னையில் நேரில் வந்து சந்தித்து நன்றி தெரிவிப்பதற்கு தன்னிடம் பணவசதி இல்லை என்று அந்த மாணவி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் மூலம் தெரிவித்தார். அதனையும் கண்ட முதல்வர் ஸ்டாலின், விரைவில் தானே சந்திப்பதாக உறுதி அளித்திருந்தார்.

அதன்பிறகு 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 29 ஆம் தேதி பல்வேறு அரசு திட்டப் பணிகளின் ஆய்வுப் பணிக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரைக்கு வருகை தந்தபோது, அரசு வாகனத்தை திருவேடகம் கிராமத்திற்கு அனுப்பி வைத்து, மாணவி ஷோபனா மற்றும் அவரது பெற்றோரை மதுரை அரசு விருந்தினர் மாளிகைக்கு வரவழைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
படிக்க உதவிட வேண்டும் என 2021-ஆம் ஆண்டு மாணவி ஷோபனா எனக்குக் கடிதம் எழுதினார். அவர் கல்லூரியில் சேரவும் படிக்கவும் உதவினேன்.
— M.K.Stalin (@mkstalin) November 10, 2024
மூன்றாண்டுகளில் தனது கல்லூரிப் படிப்பை நிறைவு செய்து, வேலைக்குச் செல்லும் அவரை அழைத்து வாழ்த்தினேன்.
ஒரு பெண் கற்கும் கல்வி ஏழேழு தலைமுறைக்கும் அரணாய்… pic.twitter.com/Y6MEtLfz5G
குடும்பத்தினரோடு வந்த அந்த மாணவிக்கு பட்டப் படிப்பிற்கான புத்தகங்கள், புத்தகைப்பை, கல்வி உபகரணங்கள் மற்றும் நிதியுதவி வழங்கி, வாழ்த்தினார் முதல்வர் ஸ்டாலின். உயர்கல்வி படிக்க உதவி கோரிய பெண்ணுக்கு உதவி செய்ததோடு, மதுரைக்கு வந்ததும் நேரில் சந்தித்து வாழ்த்திய முதலமைச்சரின் செயல் அந்த மாணவிக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மாணவி ஷோபனா 3 ஆண்டு படிப்பை முடித்தார். இதைத்தொடர்ந்து, தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் கணினி உதவியாளராக பணியில் சேரவும் உதவியுள்ளார். இன்று ஷோபனாவை நேரில் சந்தித்து, அவருக்கு வாழ்த்துக் கூறி, தான் கையெழுத்திட்ட புத்தகங்களை பரிசாக அளித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
கல்லூரியில் சேர உதவியதோடு, படிப்புக்கு பல வகைகளிலும் உதவியாக இருந்து வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், இன்று வேலையும் வழங்கியுள்ளார். ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஷோபனாவின் குடும்பம் இனி நிமிரும். இதுகுறித்து ஷோபனா நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
இன்று முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "படிக்க உதவிட வேண்டும் என 2021-ஆம் ஆண்டு மாணவி ஷோபனா எனக்குக் கடிதம் எழுதினார். அவர் கல்லூரியில் சேரவும் படிக்கவும் உதவினேன். மூன்றாண்டுகளில் தனது கல்லூரிப் படிப்பை நிறைவு செய்து, வேலைக்குச் செல்லும் அவரை அழைத்து வாழ்த்தினேன். ஒரு பெண் கற்கும் கல்வி ஏழேழு தலைமுறைக்கும் அரணாய் விளங்கும் என்பதையுணர்ந்து, பெண் கல்வியை அனைவரும் ஊக்குவிக்க வேண்டும்!" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications