உதயகுமாருக்கு மட்டும் ‘ஸ்பெஷல் கிஃப்ட்’.. ஈபிஎஸ் திட்டத்தால் கடுப்பில் ‘முக்குலத்தோர்’ சீனியர்கள்!
மதுரை : ஆர்.பி.உதயகுமாருக்கு அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தொடர்ச்சியாக அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவது அக்கட்சியின் சீனியர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கியுள்ள எடப்பாடி பழனிசாமி, அவர்கள் வகித்து வந்த பதவிகளில் தனது ஆதரவாளர்களை அமர்த்தி வருகிறார்.
அந்தவகையில், ஓ.பன்னீர்செல்வம் வகித்து வந்த பொருளாளர் பதவி திண்டுக்கல் சீனிவாசனுக்கும், எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி ஆர்.பி.உதயகுமாருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

சமூக ஆதரவு
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் ஆகியுள்ள எடப்பாடி பழனிசாமி புதிய நிர்வாகிகளை நியமிப்பதில் சாதி ரீதியான கணக்குகளோடு செயல்பட்டு வருகிறார். ‘கொங்கு லாபி' என்ற குற்றச்சாட்டை களையும் விதமாக முக்குலத்தோர், வன்னியர் உள்ளிட்ட சமூக பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஓ.பன்னீர்செல்வம் சார்ந்த சமூகத்தினரான திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராகவும், நத்தம் விஸ்வநாதன் துணை பொதுச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எதிர்க்கட்சி துணைத் தலைவர்
ஆர்.பி.உதயகுமாருக்கு ஓ.பன்னீர்செல்வம் வகித்து வந்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தென் மாவட்டத்தைச் சேந்தவர் என்பதோடு முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரது பதவியை மற்ற சமூகத்தினருக்கு வழங்கினால் கட்சிக்குள் சிக்கல் ஏற்படும். அதனால், அவரது சமூகத்தைச் சேர்ந்த தென் மாவட்ட புள்ளியான ஆர்.பி.உதயகுமாருக்கு அந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஆர்.பி.உதயகுமார்
முன்னர் ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த உதயகுமார், இப்போது தீவிரமாக எடப்பாடி பழனிசாமி ஆதரவாளராகச் செயல்பட்டு வருகிறார். பொதுக்குழு மேடையிலேயே ஓபிஎஸ்ஸை கடுமையாக விமர்சித்தார். கடந்த சில வாரங்களாகவே, ஓபிஎஸ் தரப்பினர் உதயகுமாரை கடுமையாக விமர்சித்து வந்தனர். கடந்த சில நாட்களாக ஆர்.பி.உதயகுமார் தன்னை குறிவைக்கும் ஓபிஎஸ் தரப்பினருக்கு தனியாளாக நின்று பதிலடி கொடுத்து வந்தார். முன்பை விடவும் தீவிரமாக ஓபிஎஸ் தரப்பை சாடி வருகிறார் ஆர்.பி.உதயகுமார்.

அதிக முக்கியத்துவம்
ஓபிஎஸ்ஸுக்கு எதிரான தனது தரப்பு முகமாக உதயகுமாரையே முன்னிறுத்தி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. அதன் காரணமாகவே, ஓபிஎஸ்ஸின் சொந்த மாவட்டமான தேனியில் தனது தரப்பு நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு உதயகுமார் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். ஓபிஎஸ் கோட்டையில் பலத்தைக் காட்டும் விதமாக பக்கத்து மாவட்டங்களில் இருந்தெல்லாம் நிர்வாகிகளை தேனிக்கு அழைத்துச் சென்று கெத்து காட்டினார் உதயகுமார்.

சீனியர்கள்
அதிமுகவில் ராஜன் செல்லப்பா, செல்லூர் ராஜூ ஆகியோர் மதுரையில் முக்குலத்தோர் சமூகத்தின் சார்பில் அதிமுகவில் முக்கிய தலைவர்களாக உள்ளனர். அவர்களை விட ஜூனியர் ஆர்.பி.உதயகுமார். ராஜன் செல்லப்பா, செல்லூர் ராஜூ ஆகியோருக்கு அமைப்புச் செயலாளர் பதவி வழங்கியுள்ள எடப்பாடி பழனிசாமி, ஆர்.பி.உதயகுமாருக்கு, ஓபிஎஸ் வகித்து வந்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியையே கொடுத்துள்ளார். இதனால், ராஜன் செல்லப்பா, செல்லூர் ராஜூ ஆகியோர் தங்களது ஆதரவாளர்களிடம் முணுமுணுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

ஈபிஎஸ் திட்டம்
ஓபிஎஸ்ஸை கட்சியை விட்டு நீக்கியிருப்பதால், அதிமுகவுக்கு தென் மாவட்டங்களில் பெரும் பலமாக இருக்கும் முக்குலத்தோர் சமூக வாக்கு வங்கியை இழந்துவிடக் கூடாது என கவனமாக இருக்கிறார் ஈபிஎஸ். இதற்காகவே அவர் சார்ந்த சமூகத்தின் நிர்வாகிகளை வளர்த்தெடுத்து, ஆதரவை தன் பக்கம் திருப்பலாம் எனக் கணக்குப் போட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாகவே ஓபிஎஸ்ஸுக்கு எதிராக உதயகுமாருக்கு கொம்பு சீவி விடப்படுவதாகக் கூறப்படுகிறது.

சலசலப்பு
அதிமுகவில், ஓபிஎஸ்ஸை ஓரங்கட்டி இருப்பதால், அவர் சார்ந்த சமூகத்தினருக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்கிற ஈபிஎஸ் கணக்கெல்லாம் சரிதான். ஆனால், அதே சமூகத்தைச் சேர்ந்த சீனியர்கள் பலர் இருக்கும்போது, இவருக்கு மட்டும் இத்தனை முக்கியத்துவம் கொடுத்து ஓபிஎஸ்ஸுக்கு எதிரான பிம்பம் போல நிறுத்துவது சரியானதாக இல்லை என முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த அதிமுக சீனியர்களின் ஆதரவாளர்கள் சலசலப்பை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
Recommended Video

சமாளிப்பாரா ஈபிஎஸ்?
ஓபிஎஸ்ஸை கட்சியிலிருந்து வெளியேற்றி இருப்பதால், தனக்கு ஆதரவாக பலமான கட்டமைப்பு கொண்ட அணியை உருவாக்க வேண்டிய கட்டாயம் எடப்பாடிக்கு ஏற்பட்டுள்ளது. தனது அணிக்குள் அதிருப்தி ஏற்பட்டால் சிக்கல் வலுக்கும் என்பதால், எல்லா வகையிலும் பார்த்துப் பார்த்து செயல்பட்டு வருகிறாராம் ஈபிஎஸ். இந்நிலையில், முக்குலத்து சீனியர்கள் மத்தியில் கிளம்பியிருக்கும் இந்த முணுமுணுப்பை ஈபிஎஸ் எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதுதான் தென்மாவட்டங்களில் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications