"பாஜகவை விமர்சிக்காமல் மவுனம் காப்பது ஏன்?" 2 நொடி கேப் விட்டு.. எடப்பாடி பழனிசாமி தந்த விளக்கம்
மதுரை: கூட்டணியில் இருந்து வெளியே வந்த பிறகும் பாஜகவை அதிமுக விமர்சிப்பது இல்லை என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாகப் பதிலளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இந்த முறை தமிழ்நாட்டில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாதக என்று பல முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறது. அதன்படி அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்த எடப்பாடி பழனிசாமி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
எடப்பாடி பழனிசாமி: இதற்கிடையே மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். பாஜக கூட்டணியில் இருந்து விலகிய பிறகும் பாஜகவை விமர்சிக்காமல் இருப்பது ஏன் என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "இந்தியாவில் எத்தனையோ கட்சிகள் இருக்கிறது. அவர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் அப்போது நிலவும் கள சூழலுக்கு ஏற்ப கூட்டணியை வைக்கிறார்கள். பிறகு கூட்டணியில் விருப்பம் இல்லையென்றால் கூட்டணியில் இருந்து வெளியேறுகிறார்கள். அது அவர்களின் விருப்பம்.
பாஜக கூட்டணியில் இருந்து விலகி வந்த பிறகு வேண்டும் என்றே திட்டமிட்டு திமுக தலைவர் ஸ்டாலினும் அவரது மகன் உதயநிதியும் தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார்கள். தோல்வி பயம் காரணமாகவே அவர் இப்படிப் பேசி வருகிறார்.
கூட்டணி: ஒரு கூட்டணியில் இருக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். கூட்டணியில் இருந்து வெளியே வந்த பிறகு என்ன பேசுவது. நாங்கள் திமுக போல இல்லை. கூட்டணி தர்மத்தை முறையாக கடைபிடிக்கும் கட்சி தான் அதிமுக. கூட்டணியில் இருந்து வெளியே வந்த பிறகு எதாவது தவறு செய்தால் உடனடியாக கேட்போம். கூட்டணியில் இருக்கும் போதே எந்தவொரு கட்சியையும் விமர்சித்துப் பேச மாட்டோம். அது தவறு. அதற்குப் பெயர் உள்ளடி வேலையைச் செய்வது. அது திமுகவுக்கு கை வந்த கலை. அதிமுக ஒரு போதும் அப்படிச் செய்ய மாட்டோம்.
அதிமுகவை நம்பி கூட்டணி வைக்கும் எந்தவொரு கட்சிக்கும் நாங்கள் விசுவாசமாக இருப்போம். தமிழ்நாட்டு மக்கள் பாதிக்கப்படும் அனைத்து திட்டங்களையும் கடுமையாக எதிர்ப்போம். அவற்றை முறியடிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்" என்றார்.
தொடர்ந்து லோக்சபா தேர்தல் கள நிலவரம் குறித்துப் பேசிய அவர், "மதுரையில் நிச்சயம் அதிமுக வெல்லும். இங்கே சில ஊடகங்கள் வேண்டும் என்றே திட்டமிட்டு நாங்கள் பின்தங்கி விட்டது போல செய்திகளைப் பரப்புகிறார்கள். ஆனால், உண்மை அப்படி இல்லை. களம் வேறு மாதிரி இருக்கு. அதிமுகவுக்கு மக்களுக்கு மிகப் பெரிய செல்வாக்கு இருக்கிறது. தமிழ்நாடு மற்றும் புதுவையில் அதிமுக மிகப் பெரிய வெற்றியைப் பெறும்.
திமுகவினர் வெளியே தான் பிரதமரை எதிர்க்கிறோம் என்று வசனம் பேசுகிறார்கள். ஆனால், உள்ளே அவர்கள் என்ன செய்கிறார்கள் என்றும் பிரதமருக்குக் குடை பிடிக்கிறார்கள். அதுவும் கருப்பு குடை பிடித்தால் கோபித்துக் கொள்வார்கள் என்று வெள்ளை குடை பிடிக்கிறார்கள். வெளியே வீர வசனம் மற்றும் நேரில் சரணாகதி என்பதே திமுகவின் நிலைப்பாடாக இருக்கிறது" என்று சரமாரியாகச் சாடி பேசினார்.












Click it and Unblock the Notifications