மர்டர் நகரமாகும் மதுரை? மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்குள்ளேயே பெண் கொலை! 4 நாட்களில் 4 சம்பவங்கள்..!
மதுரை: தென் தமிழகத்தின் மிக பிரபலமான மருத்துவமனையான மதுரை மாட்டுத்தாவணி அருகே இருக்கும் மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் பணியிலிருந்த பெண் ஊழியர் ஒருவர் மர்ம நபரால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. கொலை செய்த நபர் அவரது நகையையும் பறித்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக எங்கு பார்த்தாலும் போதைப் பொருட்கள் விற்பனை அதிகமாக உள்ளது எனவும், குறிப்பாக கொலை,கொள்ளை,திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை நடந்த வண்ணம் உள்ளது என எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

குறிப்பாக தமிழகத்தில் பொதுமக்கள், பெண்கள், அரசியல் கட்சி பொறுப்பாளர்களுக்கும் பாதுகாப்பு இல்லை, போதையால் கொள்ளை, கொலையில் ஈடுபடும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தலைநகர் சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அது மட்டுமல்லாமல் அதற்கு அடுத்த தினங்களில் நெல்லை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நடந்த படுகொலை சம்பவங்கள் தமிழக காவல்துறையை விமர்சனத்திற்கு உள்ளாக்கியது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டனர்.
சென்னையிலும் சென்னை மாநகர காவல் துறை ஆணையர் சந்தீப் ராய் ராத்தோர் மாற்றப்பட்டு, அருண் கமிஷனராக நியமனம் செய்யப்பட்டார். மேலும் தமிழகம் முழுவதும் சட்ட முழங்கை கண்காணிக்கும் வகையில் டேவிட்சன் தேவாசீர்வாதம் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டார். இதை அடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குற்றவாளிகளை கண்காணிக்க தனி போலீஸ் பிரிவு உருவாக்கப்பட்டதாகவும் 24 மணி நேரமும் குற்றவாளிகளை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
ஆனாலும் தமிழகத்தில் தொடர்ந்து குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலை கொள்ள தக்க வகையில் இருக்கிறது. இந்த நிலையில் தென் மாவட்டத்தின் பிரதான மாவட்டமான மதுரையில் கடந்த சில நாட்களில் மட்டும் அடுத்தடுத்து மூன்று மூதாட்டிகள் கொலை செய்யப்பட்டனர். நகைகளுக்காக வயதான மூதாட்டிகளை குறி வைத்து கொலை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. கடந்த 8ஆம் தேதி வாகைகுளத்தைச் சேர்ந்த காசம்மாள் என்ற எழுபது வயது மூதாட்டியும், ஜூலை 11ஆம் தேதி மதுரை மேலூர் அருகே பாப்பு என்ற மூதாட்டியும், விருகனூ பகுதியில் 56 வயதுடைய ஒரு பெண்ணும் கொலை செய்யப்பட்டனர்.
இதன் காரணமாக மதுரையில் பெரும் பரபரப்பு நிலவி வரும் நிலையில் தற்போது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஒரு மருத்துவமனையில் பெண் பணியாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் தமிழகத்தின் முக்கியமான மருத்துவமனையாக மதுரை மாட்டுத்தாவணி அருகே இருக்கும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை உள்ளது. இங்கு விபத்து, மூளை, நரம்பியல், இதய நோய் சிகிச்சைக்காக ஏராளமான மக்கள் வந்து செல்கின்றன. அந்த மருத்துவமனையில் தான் தற்போது கொலை சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
அந்த மருத்துவமனையில் முத்துலட்சுமி என்ற 70 வயது மூதாட்டி பணியாற்றி வந்திருக்கிறார். இந்த நிலையில் மருத்துவமனையில் நேற்று இரவு பணியில் இருந்த அவர் இன்று கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். மருத்துவமனைக்குள் புகுந்த மர்ம நபர் இரவு நேரத்தில் அவரை கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் அவர் அணிந்திருந்த தோடு உள்ளிட்ட நகைகள் மாயமாகி இருக்கும் நிலையில் நகைக்காக அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
தற்போதைய சூழலில் நகைக்காக அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? கொலையை மறைக்க நகை திருடப்பட்டதா? என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த ஒரு பிரபல மருத்துவமனையில் பணியாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications