மதுரை ஆதீனத்துக்கு எதிராக இளைய ஆதீனம் திடீர் உண்ணாவிரத போராட்டம்.. சலசலப்பு!
மதுரை: தற்போதைய மதுரை ஆதீனத்திற்கு எதிராக, மறைந்த அருணகிரிநாதரின் நினைவிடத்தில் அமர்ந்து இளைய ஆதீனம் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். அடுத்த ஆதீனத்தைத் தேர்வு செய்வதில் தன்னிச்சையாகச் செயல்படுவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரை ஆதீனமாக இருந்த அருணகிரிநாதரின் மறைவுக்குப் பிறகு ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள், மதுரை ஆதீன மடத்தின் பொறுப்பு வந்தார். 293ஆவது மதுரை குருமகா சந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹரர் ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் நியமனம் செய்யப்பட்டார்.

அண்மையில் மதுரை ஆதீனம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். தருமபுரம் ஆதீனம் ஏற்பாட்டில் சென்னை காட்டாங்கொளத்தூரில் நடைபெற்ற சைவ சிந்தாந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கடந்த மே 2 ஆம் தேதி மதுரை ஆதீனம் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது உளுந்தூர்பேட்டை - சேலம் ரவுண்டானா பகுதியில் மதுரை ஆதீனத்தின் கார் மீது மற்றொரு கார் மோதி விட்டு நிற்காமல் சென்றதாக மாநாட்டில் பேசிய மதுரை ஆதீனம், தன்னை திட்டமிட்டே கொலை செய்ய சதி நடந்துள்ளது என்றும், இதில் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் எனவும் தெரிவித்திருந்தார்.
மேலும், விபத்து ஏற்படுத்திய கார் தன்னை நீண்ட தூரம் தொடர்ந்து வந்தது என்றும், தன் கார் மீது மோதிய காரில் வந்தவர்கள் குல்லா அணிந்திருந்தனர் என்றும், முகத்தில் நீண்ட தாடி வைத்திருந்தனர் எனவும் கூறியிருந்தார். அவரது இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இது குறித்து விசாரணை செய்த கள்ளக்குறிச்சி போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், அதிவேகமாக காரை ஓட்டி சென்ற ஆதீனத்தின் கார் ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்து ஏற்பட காரணம் என தெரியவந்தது. இந்நிலையில் மதுரை ஆதீனத்தின் பேச்சு இரு மதத்தினருக்கு இடையே குழப்பத்தையும், மத மோதலையும் உருவாக்கும் வகையில் இருப்பதாக கூறி சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில், ஆதீனத்துக்கு எதிராக தவறான தகவலை பரப்புதல், கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுதல், சமூகத்துக்கு இடையே மோதலை உண்டாக்கும் வகையில் பேசுதல், பொது அமைதிக்கு கேடு விளைவிக்கும் வகையில் பேசுதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன் ஜாமீன் பெற்றார் மதுரை ஆதீனம்.
இந்நிலையில், மதுரை ஆதீனத்திற்கு எதிராக, மறைந்த அருணகிரிநாதரின் நினைவிடத்தில் அமர்ந்து இளைய ஆதீனம் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். அடுத்த ஆதீனத்தைத் தேர்வு செய்வதில் தன்னிச்சையாக மதுரை ஆதீனம் செயல்படுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications