காவிரி: உள்ளாடைகளை காண்பித்து கன்னட அமைப்பினர் 'ஆபாச' போராட்டம்-கேஆர்எஸ் அணையை பார்வையிட்ட 'மகாராணி'
மண்டியா: காவிரியில் தமிழ்நாட்டுக்கு நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து 33-வது நாளாக கன்னட அமைப்புகள், விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மண்டியாவில் நடந்த போராட்டத்தின் போது கன்னட அமைப்பினர் உள்ளாடைகளை காண்பித்து ஆபாச போராட்டம் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய நீரை திறந்துவிடக் கூடாது என்பது கன்னட விவசாயிகள், கன்னட அமைப்பினர் நிலைப்பாடு. காவிரியில் தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 3,000 கன அடி நீரை திறக்க வேண்டும் என்பது காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு. இந்த சொற்ப நீரையும் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து ஒரு மாதத்துக்கும் மேலாக மண்டியா மாவட்டத்தில் கன்னட விவசாயிகள், அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்துக்கு கர்நாடகா முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்ட பாஜக தலைவர்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.

மண்டியா ஆட்சியர் அலுவலகம் எதிரே நேற்று 32-வது நாள் போராட்டம் நடைபெற்றது. அப்போது கன்னட அமைப்பினர் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து குவிந்தனர். திடீரென தங்களது உள்ளாடைகளை காண்பித்து கன்னட அமைப்பினர் ஆபாச போராட்டம் நடத்தியது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. மண்டியா விசுவேஸ்ரய்யா சர்க்கிள் பகுதியில் அன்னதானி எம்.எல்.ஏ. (மதச்சார்பற்ற ஜனதா தளம்) தலைமையில் ஒரு போராட்டம் நடத்தப்பட்டது.
இதனிடையே தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிடக் கூடிய கிருஷ்ணராஜ சாகர் அணையை மைசூர் மகாராணி பிரமோதாதேவி நேற்று பார்வையிட்டார். 100 ஆண்டுகளுகு முன்னர் மைசூர் மகாராஜா நிதி உதவியுடன் இந்த அணை கட்டப்பட்டது. இந்த அணை கட்டப்பட்டதாலேயே காவிரி நதிநீர் பிரச்சனையும் உருவானது. அதற்கு முன்னர் வரை காவிரி நீர் தங்கு தடையின்றி தமிழ்நாடு வழியாக பாய்ந்து கடலில் கலந்து வந்தது. கிருஷ்ணராஜ சாகர் அணையை பார்வையிட்ட மகாராணி பிரமோதாதேவி, அணையின் நீர் இருப்பு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
மேலும் காவிரி நதிநீர் பிரச்சனையில் வறட்சி காலத்தில் பங்கீடு எவ்வளவு இருக்க வேண்டும் என்பதற்கான இடர்பாடு சூத்திரத்தை உருவாக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை வலியுறுத்தி உள்ளார். வறட்சி கால அல்லது இடர்பாடு கால அளவு முறை இன்னமும் உருவாக்கப்படாமல் இருப்பதே காவிரி பிரச்சனை தொடருவதற்கான காரணம் என்பது கர்நாடகாவின் கருத்து.
கேஆர்எஸ் முற்றுகை: காவிரி பிரச்சனையில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வரும் கன்னட சலுவாளி கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ் நாளை கேஆர்எஸ் அணையை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்துள்ளார். பெங்களூரில் இருந்து கேஆர்எஸ் அணையை முற்றுகையிடும் கேஆர்எஸ் சலோ போராட்டம் நடத்தப்படும் என வாட்டாள் நாகாராஜ் ஏற்கனவே அறிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications