"பதற்றம்.." இந்து கோயில் அவமதிப்பு.. பிரதமர் மோடிக்கு எதிராக வாசகம்.. காலிஸ்தான் ஆதரவாளர்கள் பரபர
மெல்போர்ன்: காலிஸ்தான் ஆதரவாளர்கள் பல நாடுகளிலும் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராகப் போராடி வரும் நிலையில், அங்குள்ள இந்து கோயில் ஒன்று சேதப்படுத்தப்பட்டுள்ளது பெரியளவில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கங்களில் ஒன்று காலிஸ்தான் ஆதரவு இயக்கம். இவர்கள் பஞ்சாபை உள்ளடக்கிய பிராந்தியங்களைத் தனியாக காலிஸ்தான் என்று அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்தியாவில் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு தடை விதிக்கப்பட்ட போதிலும், பல வெளிநாடுகளில் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கும் அமைப்புகளும் தடை விதிக்கப்படவில்லை. இதனால் அங்கு காலிஸ்தான் ஆதரவாளர்கள் வெளிப்படையாகவே இயங்கி வருகிறார்கள்.

காலிஸ்தான்
குறிப்பாகக் கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இயங்கி வருகிறார்கள். அவர்கள் தொடர்ச்சியாக இந்தியாவுக்கும் இந்திய அரசுகளுக்கும் எதிராகப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.. இதனிடையே ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் அங்குள்ள இந்து கோவில் ஒன்றை சேதப்படுத்தினர்.. கோயில் சுவர்களில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்களையும் எழுதியுள்ளனர், இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமருக்கு எதிராக வாசகம்
மேலும் கோயில் சுவர்களில் "ஹிந்துஸ்தான் முர்தாபாத்", "மோடி ஹிட்லர்" எனச் சர்ச்சைக்குரிய வாசகங்களையும் தாக்குதல் நடத்தியவர்கள் எழுதிச் சென்றுள்ளனர். ஆஸ்திரேலியாவில் மெல்போர்னின் வடக்கு புறநகரான மில் பூங்காவில் உள்ள சுவாமிநாராயண் கோயிலின் மீது தான் இந்தத் தாக்குதலை அவர்கள் நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று ஜன.11ஆம் தேதி அரங்கேறியுள்ளது. காலிஸ்தான் ஆதரவாளர்கள் பயங்கரவாதி பிந்த்ராவாலாவை தியாகி என்றும் புகழ்ந்து எழுதியிருந்தனர். சுமார் 20,000க்கும் மேற்பட்ட இந்துக்கள் மற்றும் சீக்கியர்களைக் கொன்ற இந்தியப் பயங்கரவாதி தான் இந்த பிந்த்ராவாலா.

என்ன நடந்தது
இது குறித்து அங்கு வசிக்கும் ஒருவர் கூறுகையில், "இன்று காலை நான் வழக்கம் போலக் கோயிலுக்குச் சென்றேன். அப்போது தான இதை நான் கவனித்தேன்.. அங்குள்ள அனைத்து சுவர்களும் இந்துக்களுக்கு எதிரான வாசகங்கள் இடம்பெற்றிருந்தது.. காலிஸ்தான் ஆதரவாளர்கள் அமைதியான இந்து சமூகத்தின் மீது மத வெறுப்பை ஏற்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்,. எனக்குக் கோபமாகவும் அச்சமாகவும் இருக்கிறது.. நிலைமை மோசமாக மாறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

நடவடிக்கை தேவை
இது குறித்து ஸ்வாமிநாராயண் கோயில் நிர்வாகி கூறுகையில், "இந்த வெறுப்புச் செயல்களால் நாங்கள் மிகுந்த வருத்தமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளோம். அனைத்து நம்பிக்கைகள் மற்றும் மக்களுடன் அமைதியான வாழ்க்கை இங்குத் தேவை.. இந்தச் சம்பவம் குறித்து அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம். இந்தச் சம்பவம் குறித்துச் சரியான நேரத்தில் விரிவான அறிக்கையை வழங்குவோம்: என்றார். இந்தச் சம்பவத்திற்கு அங்குள்ள பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஆஸ்திரேலியா
இது குறித்து ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தின் இந்து கவுன்சில் தலைவர் மக்ரந்த் பகவத், "வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக.. அது எந்த மதத்தின் வழிபாட்டுத் தலமாக இருந்தாலும் சரி.. எந்த விதமான வெறுப்பு மற்றும் காழ்ப்புணர்ச்சியை ஏற்க முடியாது.. மாகாணத்தின் விதிகளை மீறும் வகையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க விக்டோரியா காவல்துறை மற்றும் பிரீமியர் டான் ஆண்ட்ரூஸ் ஆகியோரை நாங்கள் வலியுறுத்துகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.

தடை செய்ய கோரிக்கை
மேலும், ஆஸ்திரேலியாவிலும் காலிஸ்தான் அமைப்புகளைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் காலிஸ்தான் ஆதரவாளர்கள் என்று தெரிந்தாலும் கூட.. அவர்கள் யார் என்று அடையாளம் காண்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இருப்பினும், அருகே இருக்கும் சிசிடிவி காட்சிகளை வைத்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் விரைவில் இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications